தில்லி
2-ஆம் கட்ட ஊரடங்கு கடைபிடித்து வந்தாலும் இந்தியாவில் கொரோனா பரவல் டாப் ஆர்டரில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிரடி திட்டங்கள் செயல்படுத்தினாலும் பரவலின் வேகம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1684 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது,"இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 23,077 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை. கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்கள் 80 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவோர்களின் விகிதம் 20.57 ஆக உள்ளது எனவும் அவர் கூறினார்.