tamilnadu

img

கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி அரசின் நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகளில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பில் தலையிடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றில் அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை கேட்க புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று 2017 ஜனவரி 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. பாஜக தனது ஆட்சி இல்லாத மாநிலங்களில் இதுபோன்ற குறுக்கு வழிகளில் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கிறது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்தனர். 

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன், கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்தார்.

புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் கிரண் பேடிக்கு இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.