tamilnadu

img

விளம்பரத்தில் வந்தவரே வறட்டி மூலம்தான் சமைக்கிறார்...

புதுதில்லி:

சமையலுக்கு சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மத்தியஅரசு எல்பிஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது. 


மோடி பதவிக்கு வந்ததும், இந்த திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) ’ என்று புதிய பெயரைச் சூட்டி, ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். 

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், 8 கோடி ஏழைக் குடும்பங்கள் இலவச எரிவாயு இணைப்பை பயன் படுத்துவதாகவும், இதன்மூலம் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் தேர்தல் கூட்டங்களில் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.


ஆனால், உஜ்வாலா யோஜனா தோல்வித் திட்டமே என்று ஆய்வுகள் குறிப்பிட்டன. இத்திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் 1 கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது முறையாக எரிவாயு நிரப்பவில்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.பிஎம்யுஒய் திட்டத்தில், முதல்முறை மட்டும்தான் எல்பிஜி சிலிண்டர் இலவசமாகக் கொடுக்கப்படும்; அது தீர்ந்து போனதும், அடுத்த சிலிண் டரை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு அவர்ளுக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது தான் நடைமுறை.


ஆனால், மோடி எதிர்பார்த்ததைப் போல, ஏழை குடும்பங்களால் சந்தை விலையில் சிலிண்டரை வாங்க முடியவில்லை. ஏனெனில் எரிவாயு தேவைப் படும் நேரத்தில் அவர்களிடம் கையில் போதிய பணம் இருக்காது. இந்நிலையில்தான், உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளி என்று,மோடியின் விளம்பரத்தில் இடம் பெற்றவரே, தற்போது சாண வறட்டி மூலம்தான் சமைக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


அந்த பயனாளியின் பெயர் குந்திதேவி. பிரதான் மந்திரி உஜ்வாலாயோஜனா திட்டத்தில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட பயனாளிகளில் ஒருவர். இவர், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 11 சிலிண்டர்கள் தான் வாங்கியுள்ளார். பெரும்பாலும் சாண வறட்டி மூலம்தான் இப்போதும் சமைத்துக் கொண்டிருக்கிறார். எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கினாலும், அதிகமான விலை கொடுத்து எங்களால் சிலிண்டரை வாங்க முடியவில்லை என்று குந்தி தேவி கூறியுள்ளார்.


இதேதான் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் ஏனைய பயனாளிகளின் நிலையாகவும் இருக்கிறது. மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில், 24 சதவிகிதம் பேர்களே மறுமுறை எரிவாயு நிரப்புகின்றனர் என்று, ஏற்கெனவே ஆய்வுகள் வெளியாகி இருந்தன. அதற்கு உஜ்வாலா யோஜனா விளம்பரத்தில் இடம் பெற்ற குந்தி தேவியும் ஒரு சாட்சியாகி இருக்கிறார்.

;