tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் : சிபிஎம் கடும் கண்டனம்

பல்கலைக் கழக விடுதிக் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டதற்கு எதிராக அமைதியாகப் போராடிய மாணவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக விடுதிக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிராக அமைதியாகப்  போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய கட்டண உயர்வு, தற்போது சாமானிய மாணவர்களின் பல்கலைக் கழகமாக, அனைத்து சமூகப் பின்னணியிலிருந்தும் வரும் மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக் கழகமாக இருந்துவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை, மேட்டுக்குடி மாணவர்கள் மட்டும் படித்திடும் பல்கலைக் கழகமாக மாற்றிடும். ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் ஆண்டறிக்கையின்படி, 2017இல் அங்கே சேர்ந்த மாணவர்களில் 40 சதவீதத்தினரின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகும்.
பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் விளிம்புநிலை பிரிவுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து படிப்பதற்கு ஏற்றவிதத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விக் கட்டணங்கள் இதுவரையிலும் கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக ஜேஎன்யு எண்ணற்ற சமூகப் பிரக்ஞை கொண்ட குடிமக்களையும், நாட்டைக் கட்டி எழுப்பும் தலைவர்களையும் தலைமுறை தலைமுறையாக உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் திறமைசாலிகள் உருவாகி வந்ததன் மீதுதான் இப்போது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்க முடியாது.
இந்த நிலைமைக்கு இட்டுச்சென்றது என்ன என்பது குறித்து மாணவர்கள் சங்கத் தலைவர்களுடன் விவாதிப்பதற்குக்கூட நெஞ்சழுத்தம் மிகுந்த துணை வேந்தர் மறுத்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட, துணை வேந்தருக்குக் கட்டளையிடுவதாக, உறுதி அளித்திருக்கிறார். இதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.”
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி)