tamilnadu

img

மகளிர் தினத்தையொட்டி ஒருநாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி  

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரியில் ஒருநாள் காவல்துறை அதிகாரியாக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்றி வருகிறார்.  

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, காவல்துறை சார்பில் ஒருநாள் நிலைய அதிகாரியாக மாணவி ஒருவரை நியமிக்க காவல் கண்காணிப்பாளர் தீபிகா திட்டமிட்டார்.  

இதற்காக என்சிசி அலுவலகத்திற்கு அலுவலக ரீதியாக கடிதம் அனுப்பியதில் அவர்கள் மாணவி நிவேதாவை தேர்வு செய்து அனுப்பினார்கள். அந்தவகையில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி கம்யூட்டர் சைன்ஸ் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி நிவேதா(19) இன்று ஒருநாள் மட்டும் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் ஒருநாள் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காவல் நிலையம் வந்த மாணவி காவலர் அணிவகுப்பை ஏற்றார்.  

இதையடுத்து காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டு காவல்நிலைய ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்தார்.  

அதனைதொடர்ந்து பேசிய அவர், மகளிர் தினத்தன்று தன்னை ஒருநாள் காவல்துறை அதிகாரியாக நியமித்த புதுச்சேரி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், இதனை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்று முழுவதும் போலீசாக பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என மாணவி தெரிவித்தார்.