புதுக்கோட்டை, மே 30-அரசுப் பள்ளிகள் மற்றும் கல்விநிலையங்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் சைக்களில் பிரச்சாரத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தனியார் கல்வி நிலையங்களின் கட்டணங்களை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல் பூர்வமான கல்வியை வழங்கவேண்டும். அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழகஅரசு நிறுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.14 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு பஸ்பாஸ், லேப்டாப், மிதிவண்டி, கல்வி உதவித் தொகைகளை கல்வியாண்டின் துவக்கத்திலேபே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து கடந்த25-ஆம் தேதிமுதல் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூரிலிருந்து மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் எம்.கண்ணன், பி.மாரியப்பன், ஜி.அரவிந்தசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சாரப் பயணம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை வியாழக்கிழமை வந்தடைந்தது. அங்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாலமுருகன் தலைமையில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், பொருளாளர் இளமாறன், இளையராஜா மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்திற்கு கறம்பக்குடி, ஆலங்குடி புதுக்கோட்டை உள் ளிட்ட பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைச் செயலாளர்கள் ஆறு.பிரகாஷ், எம்.கண்ணன், ஜி.அரவிந்தசாமி, துணைத் தலைவர் பி.மாரியப்பன் ஆகியோர் உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாலமுருகன் நன்றி கூறினார்.