புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 677 காளைகள் பங்கேற்றன. 29 பேர் காயமடைந்தனர். போட்டியை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். தாசில்தார் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 677 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் குழுவாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள், 19 பார்வையாளர்கள் என மொத்தம் 29 பேர் காயமடைந்தனர்.