tamilnadu

img

மத்திய அரசைக் காட்டி ஊதியத்தைக் குறைப்பதா? பஞ்சாப் அரசு ஊழியர்கள், எதிர்க்கட்சியினர் போர்க்கொடி

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம் தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தைவிட அதிகமாகும். இதனை மத்திய அரசு ஊழியர்க்கு இணையாகக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு, புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு, ஊதியத்தைக் குறைத்திட தீர்மானித்திருக்கிறது. இதற்கு எதிராக மாநில அரசு ஊழியர்களும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது ‘ஊழியர் விரோத நடவடிக்கை’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசாங்கம், மாநில அரசாங்கத்தின்கீழ் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க தீர்மானித்திருக்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இது ‘ஊழியர் விரோதக் கொள்கை’ என்று வர்ணித்துள்ள அவைகள், இது குறித்து அரசாங்கம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த ‘ஊழியர் விரோத உத்தரவை’ மாநில அரசாங்கம், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.    

அரசாங்கத்தின் இந்த முடிவானது புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஊதியத்தில் கடும் வெட்டினை ஏற்படுத்திடும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

அரசின் இந்த  உத்தரவுக்கு எதிராக மாநில அரசு ஊழியர்கள் ஏற்கனவே போராட்டப் பாதையில் இறங்கிவிட்டார்கள்.

அரசின் இம்முடிவை சிரோமணி அகாலி தளமும் எதிர்த்துள்ளது.

“அரசாங்கம் ஏற்கனவே ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கையை வெளியிடாது தாமதித்துக் கொண்டிருக்கிறது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியையும் அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது. இவ்வாறான மாநில அரசாங்கத்தின் ஊழியர் விரோதக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இது புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஊறு விளைவித்திடும். காங்கிரஸ் அரசாங்கம் உண்மையில் அரசாங்கத்தின் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், பின் அது அமைச்சர்கள் மற்றும் இதரர்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்திட வேண்டும்,” என்று சிரோமணி அகாலி தளம் கூறியிருக்கிறது.

(ந.நி.