இன்றைய நாளில் பொதுவுடைமை என்ற வார்த்தையைக் கேட்கும் போது, ஏதோ, ஒரு புதிய தத்துவத்தைப் பேசுவதாகப் பலர் எண்ணுகின்றனர். ஆனால், பொதுவுடைமை சமூகம் என்பது தான் மனித வாழ்க்கையின் ஆதி சமூகமாக இருந்துள்ளது. நதிக்கரையோரங்களில் தான் நாகரிகம் தோன்றியது. அந்த நாகரிகமே, அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின், இனங்களாக, குழுக்களாக, பிரிந்த மனித இனம், ஒன்றுபட்ட வளர்ச்சியை விரும்பவில்லை. பொதுவுடைமை குறித்து, மாமேதை காரல் மார்க்ஸ், மூலதனம் எனும் மிகப்பெரிய அரிய நூலை 1392 பக்கங்களில் வெளியிட்டார். உலகம் முழுவதும் பரவி நிற்கும், கிறிஸ்துவ நூலான பைபிளின் அடுத்த எண்ணிக்கையில், இன்றும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நூல்தான் மூலதனமாகும். காரல் மார்க்சுக்கு பிறகு, லெனின், ஸ்டாலின் உள்ளிட்டோர் பொதுவுடைமை தத்துவத்தை உறுதியாகத் தூக்கிப்பிடித்து பரப்புரை செய்தவர்கள் என்பதும் நாம் கண்ட வரலாறு.
இதற்கு முன்னதாக, பொதுவுடைமை கருத்துக்களை, தனது பொதுமறையில் தந்தவர் திருவள்ளுவர். உலகில் பிறந்த அனைவருக்கும் வாழுகின்ற உரிமை உள்ளதாகவும், வாழ்வுரிமை என்பது, ஏதோ, மனிதனுக்கு உயிர் வாழும் உரிமை மட்டும் எனக் கருதலாகாது. தரமான வாழ்விற்குரிய உரிமையாகவே பொருள் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை என்பதாகவே திருவள்ளுவர் உணர்த்தியுள்ளார். “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற குறளின் மூலம், பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்கக் கூறியவர் திருவள்ளுவர். ஆனால், செய்யும் தொழில் காரணமாக, சமூகத்தில் சாதி உருவாகி, பிறப்பில் பேதத்தைக் கலந்து மனிதர்களைப் பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலமாக மாறிப்போனது.
நம் இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்த விவேகானந்தரும், கோடிக்கணக்கான மக்கள், பசியிலும், பட்டினியிலும், ஏழ்மையிலும் வாடிக் கொண்டிருக்கும் போது, தேவைக்கு அதிகமாக உணவினை வைத்திருப்பவர்களை, நான் துரோகி என்பதுடன், அந்த அதிகப்படியான உணவு அடுத்தவரிடம் இருந்து திருடப்பட்டது என்பேன் என்றார். பொதுவுடைமை குறித்து, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். இப்படி பலரும் பொதுவுடைமை கருத்துக்கும், பரிணாம வளர்ச்சிக்கும் பாடுபட்டார்கள். பாரதிக்கு முன் வள்ளலார், பாரதிக்குப் பின் பாவேந்தர் பாரதிதாசன் பொதுவுடைமை கருத்தை ஆதரித்தவர்கள். இன்றும், பொதுவுடைமை, பரிணாமம் என்பது, பல பரிமாணங்களில் (பல நிலைகளில்) பரவியுள்ளது. ஆனாலும், மக்களிடையே நிலவும் எழுத்தறிவின்மை, பகுத்தறிவு இல்லாமை, மூடப்பழக்க வழக்கங்கள், மடத்தனமான ஆன்மிக நம்பிக்கை, வறுமை, சாதி, மதப் பிரிவுகள் போன்ற காரணங்களால், பொதுவுடைமை என்பது முழுமை பெறாமல் இருக்கின்றது. மக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்துக்களை மாற்றவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உள்ளது.