tamilnadu

img

பல் மருத்துவ முதுநிலை படிப்பில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு

கி.வீரமணி கண்டனம்

சென்னை, அக். 18- பல் மருத்துவ முதுநிலைக் கல்வியில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது, அதே நேரத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் உண்டு என்ற மத்திய அரசின் முடிவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவ உயர் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாகும். இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் அகில இந்திய அளவில் ஒதுக்கீடுக்கான  இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மாநிலங்களிலிருந்து பெறப்படும் 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு  ஒதுக்கீடு உண்டு; ஆனால், மாநிலங்களிலிருந்து பெறப்படும்  50 விழுக்காடு  இடங்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற இரட்டை அளவுகோல் ஏன்?  அதைவிட என்ன கொடுமை என்றால் உயர்ஜாதி ஏழைகளுக்கு  10 விழுக்காடு இட ஒதுக்கீடு கட்டாயம் எல்லா நிலைகளிலும் உண்டாம். இதற்காக ஒவ்வொரு  கல்வி நிறுவனத்திலும்  அதிக இடங்கள் ஒதுக்கப்படுமாம். மாநிலங்களிலிருந்து பெறப்படும் 50 விழுக்காடு இடங்களில் இட ஒதுக்கீடு உயர்ஜாதி ஏழைகளுக்கு உண்டு; ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் கிடையாது என்பது என்ன நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.