tamilnadu

img

பாஜக வெற்றிக்கு ‘துணைபோன’ ஓவைசி, சிராக் பஸ்வான்... தலித் - முஸ்லிம் வாக்குகளை கணிசமாக பிரித்தனர்

பாட்னா
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அசாதுதீன் ஓவைசி, சிராக் பஸ்வான் ஆகியோர் தனியாக போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தது மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.லோக் ஜனசக்தி கட்சித் தலைவரான சிராக் பஸ்வானை தனித்துப் போட்டியிடச் செய்வதன் மூலம், இரண்டு வகையில் ஆதாயம் கிடைக்கும் என்று பாஜக கணக்கு போட்டது. பீகாரில் தலித்மக்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்குத்தான் போகும். காங்கிரசுக்குப் போனால், மகா கூட்டணிக்கு அது சாதகமாகி விடும். நிதிஷ் கட்சிக்குப் போனால்,அந்த கட்சி பாஜக-வை விட அதிக இடங்களில் வென்று விடும். இந்த இரண்டுமே நடக்கக் கூடாது என்றால், தலித் வாக்குகள் பிரிய வேண்டும் என்பதே பாஜக-வின் அந்தக் கணக்கு. லோக் ஜனசக்தி மூலம் பாஜக அதனை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் சுமார் 30 பேர் தோல்வி அடைய,சிராக் கட்சி காரணமாக இருந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்த 30 தொகுதிகளில் லோக்ஜனசக்தி 10 ஆயிரம் ஓட்டுகள் முதல் 50 ஆயிரம் ஓட்டுகள் வரை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, 10 முதல் 12 தொகுதிகளில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 10 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள் ளது. இங்கெல்லாம் சிராக் பஸ்வானின் கட்சி 12 முதல் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், 5.6 சதவிகித வாக்குளைப் பிரித்துள் ளது. பாஜக கூட்டணி வெற்றிக்கு ‘உதவிய’ மற்றொரு கட்சி அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியாகும்.பீகாரில் முஸ்லிம்கள் பெரும்பாலும், ஐக்கிய ஜனதாதளம்  அல்லது காங்கிரஸ் அல்லது ஆர்ஜேடி கூட்டணிக்குத்தான் இதுவரை வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த வாக்குகளை மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து, தனி அணி அமைத்துப் போட்டியிட்டதன் மூலம் அசாதுதீன் ஓவைசி பிரித்துள்ளார்.குறிப்பாக, சீமாஞ்சல் பிராந்தியத்தில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட மஜ்லிஸ் கட்சி, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் மகா கூட்டணியின் வெற்றியைப் பறித்துள்ளது. இதுவும் பாஜகவுக்கு சாதகமாகவே முடிந்துள்ளது.