பாட்னா:
பீகார் தேர்தலில் உண்மையில் வென்றது நாங்கள்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணி வஞ்சகமாக வென்றிருக்கிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.மகாகத்பந்தன் கூட்டணியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் வியாழனன்று,மிகவும் குறைந்த வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட 20 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை வீடியோவில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார்.11 தொகுதிகள் ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவானஅளவிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில்தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. நான்கில் மகாகத்பந்தன் கூட்டணியும், ஒன்றில்லோக் ஜனசக்தி கட்சியும், ஒன்றில் சுயேச்சையும் வெற்றி பெற்றிருக்கின்றனர். மூன்று இடங்களில் வாக்குவித்தியாசம் 200-க்கும் குறைவாகும். பர்பிகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 113 வாக்குகளில் ஐக்கிய ஜனதாதளத்திடம் தோற்றிருக்கிறது. ஹில்சாவில் 12 வாக்குகளில் ஐக்கிய ஜனதா தளத்திடம் தோற்றிருக்கிறது. ராம்கார்தொகுதியில் பிஎஸ்வி வேட்பாளரை ஆர்ஜேடி 189 வாக்குவித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நாங்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்ட 20 இடங்களில்அஞ்சல் வாக்குகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எங்கள் கட்சி வேட்பாளர்கள் எழுப்பிய ஆட்சேபணைகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த வழியில் நாங்கள் 130இடங்களில் வென்றிருக்கிறோம். உண்மையில் இத்தேர்தலில் வெற்றி பெற்றது நாங்கள்தான். ஆனாலும் தேர்தல்முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகபிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி அஞ்சல் வாக்குகள் ஏன் ஆரம்பத்திலேயே எண்ணப்படவில்லை? பல இடங்களில் செல்லாத வாக்குகள் என்று கூறப்பட்டுள்ள அஞ்சல் வாக்குகளை ஆஜர்படுத்துமாறு கேட்டிருக்கிறோம். இந்தக் கோரிக்கையை மீண்டும் நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருக்கிறோம்.தேசிய ஜனநாயகக் கூட்டணி பண பலம், ஆள்பலம்மற்றும் வஞ்சக சூழ்ச்சிகளின் மூலமாக வென்றிருக்கிறது. அது மகாகத்பந்தன் கூட்டணியைவிட 12,270 வாக்குகள்மட்டுமே கூடுதலாகப் பெற்றிருக்கிறது. இதுதான் அவர்களுக்கு 15 இடங்களைக் கூடுதலாக அளித்திருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். (ந.நி.)