இமயமலையில் காணப்பட்டது பனி மனிதனின் கால் தடம் இல்லை கரடியின் கால்தடம் என்று நேபாளம் உறுதிசெய்துள்ளது.
நேபாளத்தின் மகாலு பருன் என்ற பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர் மர்மமான புராண உயிரினமான, எட்டி எனப்படும் பனிமனிதனின் கால்தடத்தை பார்த்ததாக, அந்த புகைப்படத்தையும் இந்திய ராணுவம் கடந்த திங்கட்கிழமை டிவிட்டரில் வெளியிட்டது. அந்த கால்தடத்தின் அளவு 32x15 இன்ச் இருந்ததாகவும் தெரிவித்தது. கடந்த காலங்களில் மகாலுவில் உள்ள தேசிய பூங்காவில் மட்டுமே இந்த பனிமனிதன் காணப்பட்டதாவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்திய ராணுவம் பார்த்தது பனி மனிதனின் கால்தடம் இல்லை. அது கரடியின் கால்தடம் என்று நேபாளம் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து நேபாள் ராணுவ செய்தித்தொடர்பாளர் இந்திய ராணுவத்தினருக்கு பனிமனிதன் நடமாட்டம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. காலடித்தடம் குறித்த புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து நாங்களும் உண்மையை கண்டறிய முயற்சித்தோம். ஆனால் நேபாள் உள்ளூர் மக்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் அதனை கரடியின் கால்தடம் என்பதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற கால்தடம் அடிக்கடி அப்பகுதியில் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.