tamilnadu

img

நாங்குநேறி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது!

நாங்குநேரியில் இரவில் வீடு புகுந்து மாணவர்களான அண்ணன், தங்கையை அரிவாளால் வெட்டிய கொடூரச் சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ஆம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இந்த வழக்கில் 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார்  கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தற்போது மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான 7 பேர் மீதும் 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.