tamilnadu

img

நாங்குநேரி மாணவரை சந்தித்து ஆறுதல் கூறிய கே.பாலகிருஷ்ணன்!

நாங்குநேரியில் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சக மாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ஆம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த நிலையில்,  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சந்தித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், அண்ணன் சின்னதுரை உயிரை காத்த தங்கை சந்திரா செல்விக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.