tamilnadu

img

என்.எல்.சி அருகே உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

நெய்வேலி என்.எல்.சி-யை அருகே உள்ள கிராமங்களில் குடிநீரில் மாசு ஏற்பட்டுள்ளதா என நீர் தொகுப்பாய்வுத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு.
பூவுலகின் நண்பர்கள் மற்றும் அத்யாயன் கேந்திரா இணைந்து ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில், என்எல்சி நிலக்கரி சுரங்கம், அனல் மின்நிலையம் பகுதிகளில், 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அதில், தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று,  வெள்ளாளன்குளம் பகுதியில் 30 மடங்கு துத்தநாகமும், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கல் தண்ணீரில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இங்குள்ள தண்ணீரில், புளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவையும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை என்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், என்எல்சியை சுற்றி மாசு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், என்.எல்.சி-யை அருகே உள்ள கிராமங்களில் குடிநீரில் மாசு ஏற்பட்டுள்ளதா என நீர் தொகுப்பாய்வுத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.