tamilnadu

img

இந்நாள் நவம்பர் 05 இதற்கு முன்னால்

1556 - இரண்டாம் பானிப் பட் போர், டெல்லிப் பேரரசர் ஹெமு என்னும் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா வுக்கும், அக்பரின் படைகளுக்கு மிடையே நடைபெற்றது. பாபரின் மறைவுக்குப்பின், ஷெர்-ஷா சூரி-யிடம் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளை 1539இல் ஹுமாயூன் இழந்துவிட்டார். 1540 மே 17இல் சூர் பேரரசை உருவாக்கிய ஷெர்-ஷா, எதிர்பாராதவிதமாக மே 22இல் உயிரிழக்க(பின்னர் விரிவாக!), அவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த இஸ்லாம்-ஷா சூரி, அவர் மகன் ஃபிரோஸ் கானுக்கு 12 வயதேயானபோது,  1553இல் இறந்துவிட்டார். ஃபிரோஸ் கானைக் கொலைசெய்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிய தாய்மாமன் அடில்-ஷா சூரி, அரசு நிர்வாகத்தில் அக்கறையின்றி, சுகவாசியாக இருந்ததால், முதலமைச்சரும், படைத் தளபதியுமான ஹேமச்சந்திரனே அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார்.

1556இல் ஹுமாயூன் இறந்தபோது வங்கத்திலிருந்து ஹேமச்சந்திரன், உடனடியாக முகலாயப் பேரரசின் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றத் தொடங்கினார். அவர் முன்னேறி வருவதையறிந்த ஆக்ராவின் முகலாய ஆளுனர் போரிடாமலே, கோட்டையைக் காலிசெய்து ஓடிவிட்டார். 1556 அக்டோபர் 7இல் துக்ளகாபாத் சண்டையில் வென்று டெல்லியைக் கைப்பற்றிய ஹேமச்சந்திரன், பண்டைய இந்து அரசர்களின் பட்டமான விக்ரமாதித்யா என்பதுடன் டெல்லியின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.

அடில்-ஷாவின் தளபதியாகப் போரில் வென்ற ஹெமுவின் படையினரும் ஆஃப்கானியகளாகவே இருந்தநிலையில், டெல்லியின் பேரரசர் என்று அறிவித்துக்கொண்டாலும், அடில்-ஷாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவராக இல்லாமல் சுதந்திரமான அரசராக இருந்தாரா என்பதில், வரலாற்றாசிரியர்களிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஹுமாயூன் இறந்தபோது அக்பருக்கு வெறும் 13 வயதென்பதால், காப்பாளராக பைரம் கான் ஆட்சி நடத்தினார்.

துக்ளகாபாத் தோல்வியையடுத்து, அவர் அனுப்பிய பத்தாயிரம் குதிரைப்படையினர், முப்பதாயிரம் குதிரைப்படையினர், 500 யானைகள் கொண்ட ஹெமுவின் படையுடன் பானிப்பட்டில் மோதின. ஹெமுவின் படை பெரியதாக மட்டுமின்றி, வலுவாகவுமிருந்தது. அது உறுதியான வெற்றியை நெருங்கிய நேரத்தில், (ஹெமுவை நோக்கி எய்யப்படாத) ஓர் அம்பு எதிர்பாராமல் ஹெமுவின் கண்ணுக்குள்  புகுந்ததில் அவர் நினைவிழந்தார். ஹெமு சரிந்ததில் அவரது படையினர் கலக்கமுற்றதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட முகலாயப் படைகள் வென்றன. பிடிபட்டும் மயக்கத்திலிருந்த ஹெமுவின் தலையைக் கொய்யுமாறு அக்பரை பைரம்கான் கேட்டுக்கொண்டாலும், அக்பர் மறுத்துவிட்டார். பைரம்கானே அதைச் செய்ய, ஹெமுவின் டெல்லிப் பேரரசு 29 நாட்களில் முடிவுற்றது.