tamilnadu

img

இந்நாள் ஜுலை 14 இதற்கு முன்னால்

1933 - கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம்’, ஹிட்லரால் நிறைவேற்றப்பட்டது. நாஜிகளுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கான ஃபயர் டிக்ரி என்ற சட்டத்தையும், சர்வாதிகாரியாவதற்கான அதிகாரமளிக்கும் சட்டத்தையும் இயற்றியதைத் தொடர்ந்து, ஹிட்லர் இயற்றிய அடுத்த சட்டம் இதுதான். மனவளர்ச்சிக்குறை தொடங்கி, வலிப்பு, மரபுசார்ந்த குருடு, செவிட்டுத்தன்மை கொண்டவர்களுடன், கடுமையான மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக்கூட கட்டாய கருத்தடை செய்ய இச்சட்டம் வழிவகுத்தது. ஹிட்லரே நேரடியாகக் கையெழுத்திட்ட இச்சட்டத்தின்படி, 200 இனத்தூய்மை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. நாஜிகள் மேற்கொண்ட இனத்தூய்மை நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இயற்றப்பட்ட இச்சட்டம், ஜெர்மனியிலிருந்த அனைத்து மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளுக்கு இந்தக் குறைபாடுகள் இருந்தால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தவறினால் பெருந்தொகை அபராதமும் விதித்தது. இச்சட்டத்தின்படி, இரண்டாம் உலகப் போருக்கு முன் சுமார் ஆறு லட்சம் பேரும், போர்க்காலத்தில் சுமார் 4 லட்சம் பேரும் கட்டாயக் கருத்தடைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘வாழத் தகுதியற்ற வாழ்க்கை’ என்றுகூறி, சுமார் 70,000 பேர் கருணைக்கொலையும் செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் நடைபெற்ற நூரம்பர்க் விசாரணையில், அமெரிக்காவைப் பின்பற்றித்தான் கட்டாயக் கருத்தடையை ஜெர்மனி மேற்கொண்டதாக நாஜிகள் பதிலளித்தனர். உண்மையும் அதுதான்! 1880களில் இனத்தூய்மைக்கொள்கை அமெரிக்காவில் பரவியதையடுத்து, 1907இல் இந்தியானா மாநிலம்தான் உலகின் முதல் கட்டாயக் கருத்தடைச் சட்டத்தை இயற்றியது. அதைத் தொடர்ந்து 30 மாநிலங்கள் இச்சட்டத்தை இயற்றின. 1921இல் இந்தியானா உச்ச நீதிமன்றம் இதைச் செல்லாததாக்கினாலும், 1924இல் மற்றொரு வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வர்ஜீனியா மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இச்சட்டங்கள் செல்லத்தக்கவையாயின. கட்டாயக் கருத்தடை மனிதத்தன்மையற்றதாகத் தற்போது கருதப்பட்டாலும், அமெரிக்காவில் 1924 தீர்ப்பு இன்றுவரை மாற்றப்படவேயில்லை. எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காகச் சில நாடுகளில் கட்டாயக் கருத்தடை இன்றும் சட்டமாக இருந்தாலும், 2011இல் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் ஆகியவற்றுக்கெதிரான மாநாடு, இதனை மனிதகுலத்துக்கெதிரான குற்றமென்று அறிவித்தது.