1847 அமெரிக்காவிட மிருந்து விடுதலை பெற்று விட்டதாக லைபீரியா அறிவித்தது. அமெரிக்காவின் விடுதலைக்குப்பின், பருத்தித் தோட்டங்கள், ஆலைகளின் வளர்ச்சி முதலானவற்றால் அடிமை வணிகமும் அதிகரித்து, 19ஆம் நூற்றாண்டில் அடிமைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் அளவுக்கு வளர்ந்தது. அடிமைகளாக இருந்த கருப்பினத்தவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்து, அவர்களின் அடுத்த தலைமுறைகளும் உருவாகியிருந்தன. சில தென்பகுதி மாநிலங்களில் கருப்பினத்தவர் பெரும்பான்மையாகவே இருந்ததால், அடிமைக் கலகங்களும் தோன்றத் தொடங்கியிருந்தன.
சில வடபகுதி மாநிலங்களில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்ட கருப்பினத்தவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. காலங்காலமாக அடிமைப் பெண்களை வெள்ளையர்கள் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால், விடுவிக்கப்பட்ட கருப்பினத்தவர்களால், வெள்ளையர்களுக்கு ஆபத்து வரும் என்ற அச்சம் அவர்களுக்கிருந்தது. விடுவிக்கப்பட்டவர்கள் பொதுவான உழைப்புச் சந்தைக்கு வரும்போது, வெள்ளையர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதுடன், மலிவான உழைப்பின் வரவால் ஊதியமும் குறையும் என்ற அச்சமும் நிலவியது. இவற்றால், தங்களுக்கு ஆபத்து என்று கருதியதால், கருப்பினத்தவரை ஆப்ரிக்காவுக்கே அனுப்பிவிட்டு, அதனையே அவர்களுக்கு நன்மை என்றும் காட்டிக்கொள்ள, அமெரிக்கக் குடியேற்றக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஏற்கெனவே, இங்கிலாந்தில் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை, ஆப்ரிக்காவிலிருந்த தங்கள் குடியிருப்பின் சியாரா லியோன் பகுதியில், லண்டனின் ஏழைக் கருப்பினத்தவருக்கான குடியிருப்பு என்பதை உருவாக்கி, இங்கிலாந்து அனுப்பியிருந்தது. அதே பகுதிக்கு, அமெரிக்காவும் 1821இல் முதலில் அனுப்பிய 22 கருப்பினத்தவர்களில் அனைவருமே மஞ்சள் காய்ச்சல் என்ற நோயால் 3 வாரங்களிலேயே இறந்தாலும், அதற்கெல்லாம் கவலைப்பட யாருமில்லை. அடுத்தடுத்து அனுப்பப்பட்டவர்கள், அமெரிக்காவுக்கு மிக அருகாமையிலமைந்த ஆப்ரிக்கப் பகுதி என்பதால் லைபீரியாவில் இறக்கிவிடப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தை நிர்வகிக்க வெள்ளையர்களை அமெரிக்கா நியமித்திருந்தது. 1842இல் முதல் வெள்ளையரல்லாத ஆளுநரான ஜோசப் ஜென்கின்ஸ் ராபர்ட்ஸ் என்பவரை முதல் குடியரசுத் தலைவராகக்கொண்டு, லைபீரிய நாடாளுமன்றம் 1847இல் விடுதலையை அறிவித்தது. அதைத் தனிநாடாக அங்கீகரிக்க அமெரிக்கா தொடக்கத்தில் மறுத்தாலும், 1862இல் அங்கீகரித்தது.