tamilnadu

img

‘இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் செய்த முதல் மாநிலம் ஜம்மு-காஷ்மீர்’

திண்டுக்கல், ஆக.22- நாட்டின் நிலச்சீர்திருத்தம் செய்த முதல் மாநிலம் ஜம்மு-காஷ்மீர். அதனால் தான் அதனை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று  சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம்சாட்டினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற தோல் பதனிடும் தொழிலாளர் சங்க கட்டடமான ‘தியாகிகள் அரண்’ திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:  காஷ்மீரில் அந்த மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து 370ஐ மோடி ரத்து செய்துள்ளார். பிற மாநிலங்களைப் போல அல்லாமல் காஷ்மீர் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழும் மாநிலமாக உள்ளது. அதனால் தான் அந்த மாநிலத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.  அந்த மாநிலத்தில் யாரும் நிலம் வாங்க முடியாது என்பதால் 370 பிரிவை நீக்கியதாக காரணம் கூறப்படுகிறது. இந்த நாட்டில் முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்ட மாநிலம் ஜம்மு-காஷ்மீர் தான். மேற்கு வங்கத்தில் கூட அதற்கு பிறகு தான் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டது.  1947க்கு முன்பு அந்த மாநிலத்தில் இருந்த கிட்டத்தட்ட 90 சதவீதமான நிலங்களை மக்கள் நிலச்சீர்திருத்தம் செய்து கொண்டனர். ஒரு ஏக்கர், 2 ஏக்கர் என நிலங்கள் பகிர்ந்து அளிக்க ப்பட்டது. ஷேக் அப்துல்லா தான் அந்த நிலச்சீர்திருத்தத்தின் தலைவராக இருந்தார். அப்போதைக்கு இருந்த மன்னர் ஹரிசிங்கை காட்டிலும் ஷேக் அப்துல்லா தான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசால் அனைத்து தொழில்களும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழி லாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ராணுவ தளவாட தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு மாத வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளனர். சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்காதே என்று கடை யடைப்பு போராட்டம் நடந்து கொண்டி ருக்கிறது. மோடி கொண்டு வந்த மேக் இன் இண்டியா நடைபெற வில்லை. கார் மற்றும் கனரக உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் தான் வேலை கிடைக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மத்திய அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோதக் கொள்கை களுக்கு எதிராக நாம் களம் காண வேண்டியுள்ளது. திண்டுக்கல் சவேரியார்பாளையம் தியாகிகள் வாழ்ந்த மண். இங்கு இப்படி ஒரு சிறப் பான கட்டடத்தை கட்டி எழுப்பி யுள்ள உங்களுக்கு சிஐடியு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு சுகுமாறன் பேசினார்.  கூட்டத்திற்கு தோல்பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன், தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் ஸ்டாலின், செயலாளர் சி.பி.ஜெயசீலன்.  சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநில செயலாளர் கே.ஆறுமுகநயினார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. பாலபாரதி, என்.பாண்டி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சங்கப் பொருளாளர் தவக்குமார் நன்றி கூறினார். (நநி)