tamilnadu

30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை: செவிலியர் சிக்கினார்

நாமக்கல், ஏப். 25-நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிறப்புச் சான்றிதழுடன் குழந்தைகள் விற் பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. குழந்தை விற்பனைக் காகவே செவிலியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகக் கூறப்படும் பெண்ணின் ஆடியோவும் வெளியாகியுள்ளது.குழந்தைகள் இல்லாத தம்பதிகள் சட்டப்படி தத்து எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவற்றை நிறைவேற்றி குழந்தைகளை தத்தெடுப்பது கடினமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை தத்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்களின் தொழிலும் அமோகமாக நடந்து வருவதாக புகார்கள் உள்ளன.ஆண் குழந்தையாகவும் வெண்மை நிறத்தில் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற் பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது. 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும், இதற்காக பெரிய கும்பலே செயல் பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டு காலம் செவிலியராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற அமுதா என்ற பெண், தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண்ணிடம் குழந்தை இல்லாத தம்பதி பேசும் ஆடியோ என்று கூறப்படும் குரல்பதிவு ஒன்றும் வெளியாகியுள்ளது.30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பதாகவும் அதற்காகவே செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறுவது பதிவாகியுள்ளது. முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் விலை விவரத்தை கூறுவதும் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை விற்பனை செய்யும் கும்பல் வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை திருடி வந்து விற்று வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்தக் கும்பல், அவர்கள் மூலம் குழந்தைகள் இருக்கும் இடங்களையும், குழந்தை தேவைப் படும் தம்பதிகளையும் தெரிந்துகொண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதனிடையே, இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு, நாமக்கல்லில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநருக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

;