tamilnadu

img

விளம்பரதாரரை நீக்குவதால் நஷ்டம்..

கிரிக்கெட் வாரிய பொருளாளர் விளக்கம்

மும்பை, ஜூன் 19 - பிசிசிஐ நடத்த உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு சீன நிறுவனமான ‘விவோ’ ஸ்பான்சர் செய்கிறது. இந்நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி வழங்கி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர் சங்கம் 500-க்கும் மேற்பட்ட சீனப் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றைப் புறக் கணிக்க மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து, கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாம் உணர்ச்சி வசப்படும் போது நமது அறிவு பின்னோக்கி சென்று விடும். சீன நிறுவனத்திடம் இருந்து நாம் ஆதாயம் பெறுவது மற்றும் சீன நிறுவனம் நம்மிடம் இருந்து ஆதாயம் பெறுவது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சீன நிறுவன பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கும் போது இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்கள் பணத்தை பெறுகின்றனர். அதில் ஒரு பகுதியை பிசிசிஐ-க்கு அளிக்கின்றனர். அதில் இருந்து நாங்கள் இந்திய அரசுக்கு 42 சதவிகிதம் வரி அளிக்கிறோம்.  எனவே இது இந்தியாவுக்கு  ஆதாயம் அளிக்கிறதே தவிர சீனாவுக்கு இல்லை. சீன நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலகினால் இந்த  பணத்தை அவர்கள் சீனாவுக்கே எடுத்துச் செல்வார்கள்.    மாறாக, ஐபிஎல் ஸ்பான்சர் மூலம் அந்தப் பணம் இந்தியாவிலேயே இருக்கும் என்பதால் நாம் அதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும். மேலும் வரி அளிப்பதன் மூலம் இந்திய அரசும் ஆதாயம் அடைகிறது.  இந்திய அரசு, சீனப் பொருட்கள் மற்றும் சீன நிறுவனங்களை முழுவதுமாக தடை செய்வதாக அறிவித்தால் பிசிசிஐ-யும் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அது போன்ற தடை உத்தரவு ஏதும் இல்லாமல் இந்தியப் பணம் இந்திய கிரிக்கெட் மேம்பாட்டுக்குப் பயன்படும் எனும் போது இதில் ஏதும் பிரச்சனை உள்ளதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அருண் துமல் கூறியுள்ளார்.

;