games

img

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. தொடர்ந்து 2ஆவது மற்றும் 3ஆவது நாள் ஆட்டங்களும் மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று (செப்.30) 4ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி, 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்த போது 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இன்று(அக்.01) 5ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் தனது 2ஆவது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.