tamilnadu

img

நரக வேதனையில் நாகர்கோவில் மாநகராட்சி.... வெற்றிபெற வாய்ப்பில்லாத திட்டங்களில் விஞ்சி நிற்பது ஊழல் மட்டுமே...

நாகர்கோவில்:

நாகர்கோவில் நகராட்சி 2019பிப்ரவரி 14-ம் தேதி தமிழகத்தின் 13 – வது மாநகராட்சியாக அவசர அவசரமாக தரம் உயர்த்தப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக உள்ள இந்நகரம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2.25 லட்சம் மக்கள் தொகை கொண்டது. தற்போது மூன்று லட்சத்தை தாண்டி உள்ளது.  இதன் மொத்த பரப்பளவு 49.37 சதுர கி.மீ. 52 வார்டுகளை கொண்டுள்ளது. இந்நகரில் பிரபலமான நாகராஜா கோவிலும், கோட்டார் சவேரியார் கோவிலும் குறிப்பிடத்தக்கதாகும். நகரில் பாய்ந்தோடும் பழயாறு ஒரு இயற்கை கொடையாகும். மேற்கு தொடர்ச்சி மலைக்கும்அரபிக்கடலுக்கும் இடையிலுள்ள இந்நகரம் கன்னியாகுமரியில் இருந்து 18 கி.மீ தூரத்திலுள்ளது. ஆசாரிப்பள்ளத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் உள்ளது. 

பாதாளச் சாக்கடை திட்டம்
2013ல் நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது, பாரதிய ஜனதா கட்சியின் மீனாதேவ் தலைவராக இருந்தபோது, மார்ச் மாதம் ரூ.76.4 கோடி மதிப்பில் உலக வங்கி கடனில் ஜப்பான் திட்டம் என்ற பெயரில் நவீன பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அதற்கான உடனடி முதலீடாக மத்திய அரசு ரூ.52 கோடி, மாநில அரசு ரூ.6 கோடி மீதி பணம் நகராட்சி என்று கூறப்பட்டது. இரண்டாண்டுகளில் முடிக்காத காரணத்தால் மத்திய அரசுப் பணம் ரூ.52 கோடி இனி கிடைக்காது; அதுமாநில அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இதற்குமுன் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைகளில் போடப்பட்டுள்ள குழாய்கள் இரண்டடி அகலம் கொண்டதாகவும் ஆள் உயர முச்சந்தி, நாற்சந்தி கான்கிரீட் கிணறுகளும் உள்ளன. ஆனால் நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழாய்கள் அரை அடி அகலம் கொண்ட சிறு குழாய்களும், இரண்டடி, மூன்றடி ஆழ முச்சந்தி, நாற்சந்தி கான்கிரீட் கிணறுகளும் அமைத்தார்கள். பறக்கின் கால் பகுதியில் கழிவு நீரேற்று திட்டம் ரூ.6 கோடி செலவில் கட்டுவதாகவும், சாக்கடை உறிஞ்சு நிலையம் வலம்புரி உரகிடங்கு பகுதியில் அமைப்பதாகவும் தெரிவித்தார்கள். உறிஞ்சப்படுகிற சாக்கடை அங்கேயே நீராகவும் உரமாகவும் பிரிக்கப்படும். உரம் விவசாயிகளுக்கும் நீர் குடிநீராகவும் பயன்படுத்தலாம் என்றார்கள். மக்கள் குடிநீராக ஏற்கவில்லை என்றால், விவசாயத்திற்கே பயன்படுத்துவது என்று சொன்னார்கள்.

மக்களின் சந்தேகம்
சிறு குழாய்கள் பதிப்பதை மார்க்சிஸ்ட் கட்சியும், மக்களும் கேள்வி எழுப்பிய போது, அதிகாரிகள், இந்த ஜப்பான் திட்டத்தில் சாக்கடைஓடாது, குழாய்களிலும், கான்கிரீட் கிணறுகளிலும் நிற்கும் சாக்கடை உறிஞ்சேற்று இயந்திரங்களால் உறிஞ்சும் போது ஒரே மூச்சில் அழுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வந்து விடும் என்றனர்.

இன்றைய நிலை என்ன?
வருகிற மார்ச் மாதத்துடன் எட்டு வருடங்கள் முடிவடைகின்றன. தற்போது திட்டம் முடிப்பதற்கான மதிப்பீடு ரூ.110 கோடியாக மாறிவிட்டது. மேலும் கூடலாம். இவ்வளவு கால தாமதம் ஆன காரணத்தால் அரைகுறையாக நிற்கிற வேலையால் ஏற்கனவே போடப்பட்ட பகுதிகளில், மக்கள் சாலைகளை செப்பனிடக் கேட்டுப் போராடியதால் இரண்டுமுறைகளுக்கு மேலாக போடப்பட்ட தரங்கெட்டசாலைகளில் கனரக வாகனங்கள் ஓடி பள்ளம்ஏற்பட்டு உள்ளே பதிக்கப்பட்ட குழாய்கள் உடைந்தும், கான்கிரீட் கிணறுகள் மூடிகள் உடைந்தும் பக்க சுவர்கள் சிதைந்தும் காணப்படுகிறது. ஆக, ஒரு நாள் வேலை முடிந்தது என்று எண்ணி உறிஞ்சு இயந்திரத்தை இயக்கினால் அது எந்த சாக்கடையையும் உறிஞ்சாது.
அப்படியானால், நாகர்கோவில் நகரின் மண்ணுக்கடியில் ரூ.110 கோடி ரூபாய்க்கு மேல் பாதாளச் சாக்கடை என்ற பெயரில் பிணமாக குழாய்களும், கான்கிரீட் கிணறுகளும் புதைக்கப்பட்டிருக்கும்.என்றும் வெற்றிபெறாத இந்த ஊழல் திட்டம், நாகர்கோவில் மக்கள் மீது உலக வங்கி கடன் வட்டியுடன் வைக்கப்பட்டுள்ள பாரம். துயரம்.

முறையீடு
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர குழு, தற்போது ஆணையராக உள்ள ஆஷா அஜீத் இ.ஆ.ப அவர்களை மூன்று முறை சந்தித்து மனு கொடுத்துள்ளது. பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரசெயலாளர், கே. மோகன் குறிப்பிடும் போது, ‘மாநகராட்சியாக மாறியும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. வரி உயர்வு மட்டும் தான் பலன். குடிதண்ணீர், சாக்கடை திட்டம், சுகாதாரம் அனைத்திலும் மக்களுக்கு அவதியும் துயரமும் தான். ஆட்சித் தலைவரிடமும் முறையிட்டு எந்த பலனும் இல்லை’ என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் தொழிற்சங்க தலைவருமான எஸ். அந்தோணிகூறும்போது, ‘இத்திட்டம் காலதாமதமாவ தால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.மழைக்காலங்களில் சேறும் சகதியாகவும், வெயில் காலங்களில் குப்பைகளும் தூசுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துக் களும், மரணங்களும், மக்களுக்கு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் பாரபட்சமாக நடக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.

‘அம்ரூத்’ தனியார் குடிநீர் திட்டம்
நாகர்கோவில் நகர மக்கள் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தற்போது உள்ள குடிநீர் திட்டத்தின் மூலமாக முக்கூடல் அணையிலிருந்தும், கோடை காலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெருஞ்சாணி அணையிலிருந்தும் தண்ணீர் பெற்று வருகின்றனர். அதில் அபிவிருத்தி வேண்டும் என கேட்டு வருகிற நிலையில், திடீரென சாலையின் இடதுபுறம் குடிநீர் குழாய் பதிக்க ஆரம்பித்து வேலை துவக்கப்பட்டது. விசாரித்தால், மக்களிடம் எந்த கோரிக்கையும் இல்லாமல் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர்விநியோகத்தை அம்ரூத் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது தெரியவந்தது. இது ஒரு அப்பட்டமான துரோகம். அவர்கள் ஒப்பந்தப்படி சாலையை செப்பனிடுவதும் இல்லை. இதனால் நகரிலுள்ள பிரதான சாலைகளான, பாலமோர் ரோடு, கே.பி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, எம்.எஸ். ரோடு, கோட்டார் ரோடு, பீச் ரோடு, இந்துக்கல்லூரி சாலை, சர்குணவீதி, சிதம்பரநாதன் தெரு, ஒழுகினசேரி வடசேரி சாலை, பெருவிளை ரோடு, சானல் கரை ரோடு, ஏராளமான உள் சாலைகள் மரணச்சாலைகளாகிவிட்டன. இதனால் ஏராளமான வாகனங்கள் பழுதாகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எரிபொருள் செலவு கூடுகிறது. வெயிலிலும் மழையிலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் வேலைகளை முடித்து நாகர்கோவில் மாநகராட்சியை அதன் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள். அதை உடனடியாக மேற்கொள்ளுமா தமிழக அரசு?

===எம். அகமது உசைன்===