சீர்காழி, ஆக.31- நாகை மாவட்டம் சீர்காழி என்.ஜி.ஓ.நகரைச் சேர்ந்தவர் எம்.செல்வகணே சன்(56). இவர் சீர்காழி எல்.ஐ.சி.அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணி புரிகிறார். இவர் நெகிழி ஒழிப்பு, மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். மேலும் தனது பெற்றோரின் 80- ஆவது திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். தற்போது புவிவெப்பமாதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரங்களை வளர்ப்பது தான் தீர்வு என்பதை மேற்கொள் காட்டவும் தனது மகன் திருமணத்தை வாய்ப்பாக பயன்படுத்தினார். அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி திருமண விழாவையொட்டி ‘பிளான்ட்டபுல் இன்விடேஷன்’ எனப்படும் விதை அழைப்பிதழை வழங்கினார். இந்த அழைப்பிதழில் வெளிப்புற கவர் சாக்குப்பை முறையில் உள்ளது. லேமினேஷன் எனப்படும் நெகிழியைச் சிறிதளவு கூட பயன்படுத்தக் கூடாது என்ற கவனத்துடன் இதை தேர்வு செய்துள்ளார். விதை சேர்த்து தயார் செய்யப்பட்ட அழைப்பிதழை வழங்குவதுடன் அதில் இந்த அழைப்பிதழை படித்து விட்டு தூக்கியெறியாமல் செய்முறை குறிப்பு அச்சிடப்பட்ட அட்டை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழை பெறுபவர்களிடம் விதையை நட்டு வளர்ப்பது குறித்து செல்வகணேசன் விளக்கமளிக்கிறார். அதாவது இந்த வெள்ளை அட்டை உள் அழைப்பிதழை பெறும் நபர்கள் அதை இரவு முழுவதும் நீரில் நனைக்க வேண்டும். பின்னர் அழைப்பிதழ் காகிதத்தை கால் அங்குலம் குழி பறித்து மண்ணில் புதைக்க வேண்டும். அதில் உள்ள ஈரப்பதம் உள்ள விதை முளைத்து வளரும் நிகழ்வு ஆரம்பமாகும். நான்கு முதல் ஆறு வாரங்களில் நீரின் உதவியுடன் நல்ல வளர்ச்சியை விதை அடையும் என அதில் குறிப்பிட்டுள்ளது.