tamilnadu

img

நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லா மாதிரவேளூர் சுகாதார நிலையம்

 சீர்காழி: மாதிரவேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் கடந்த 2012-ஆம் ஆண்டு ரூ. 34 லட்சம் மதிப்பில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் கட்டுவதற்கு மாதிரவே ளூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் 1 ஏக்கர் நிலத்தை இலவசமாக சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.  இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பாதுகாப்பின்றி எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டிடம் கட்டப்பட்டு 8 ஆண்டுக்குள் 2 முறை கட்டடம் பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இருந்தும் கட்டிடம் வலுவிழந்தும் தரை தளம் உடைந்தும், மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்து தண்ணீர் கட்டிடத்திற்குள்ளே கசிகிறது. இதனால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். உடைந்த தரைதளத்தால் வயதான ஆண் மற்றும் பெண் நோயாளிகள் தடுமாறி கீழே விழுந்து அவதிக்குள்ளாகின்றனர்.  இந்த சுகாதார நிலையத்திற்கு 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையோரமுள்ள கடலூர் மாவட்டத்திலிருந்தும் தினந்தோ றும் 300 க்கும் மேற்பட்டோர் வந்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே கட்டடத்தை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் மாதிரவேளூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.