சீர்காழி, செப்.12- கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் வருடந்தோறும் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடி சுமார் 15 ஆயிரம் எக்டேரில் நடப்பது வழக்கம். இந்த வருடம் கடும் வறட்சியிலிருந்து மீளமுடியாத விவசாயிகள் சென்ற வருடத்தை விட குறைந்த அளவு நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்தனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மிகுந்த சிரமத்துடன் நிலத்தடி நீரை மின் மோட்டார் மற்றும் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தி இரண்டாயிரம் எக்டேர் நிலப்பரப்பில் மட்டும் குறுவை சாகுபடி செய்தனர். அதனைத் தொடர்ந்து சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யும் முயற்சியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. ஆனால் கொள்ளிடம் பகுதியில் பாசன வசதி செய்து வரும் பிரதான தெற்குராஜன் வாய்க்கால் புதுமண்ணியாறு மற்றும் பொறை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. காலம் தாழ்த்தி திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு முழுமையாக வந்து சேருமா என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். பாசனத்திற்காக தண்ணீரை குறிப்பிட்ட தினங்களிலேயே திறந்து விட்டிருந்தால் ஏரி குளம் மற்றும் குட்டைப் பகுதிகளிலும் கிளை வாய்க்கால்கள் வழியாகத் தண்ணீர் சென்று தேங்குவதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனால் நிலத்தடி நீர் உயரும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதை ஓரளவுக்குத் தடுக்கவும் முடியும். ஆனால் மராமத்துப் பணியை காரணம் காட்டி நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளால் தண்ணீர் பாசனத்திற்கு வந்து சேராமல் வீணாக கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகாரிகள் அலட்சியமே, தண்ணீர் வீணாகச் செல்வதற்கு காரணம் என்று விவசாயிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இனி மேலும் மெத்தனம் காட்டாமல் உரிய தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்து சேரும் வகையில் பொது பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைசாவடி அருகே ரயில்பாலத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் பயனின்றி வீணாக கடலுக்குள் செல்லும் தண்ணீர்.
(உள்படம்) நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே விநாயக்குடி கிராமத்தில் பிரதான பாசன பொறை வாய்க்கால் தண்ணிரீன்றி வறண்டுபோயுள்ளது.