tamilnadu

img

மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த வங்கி அதிகாரிகள்

தரங்கம்பாடி, மே 9-நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரியக்குளம் கூறைநாடு பகுதியில் வசிக்கும் கண்ணையன் மகள் ஜெயந்தி(27). மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகையை வங்கி அதிகாரிகள் வழங்க மறுத்து 5 மாதமாக அலைக் கழிப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 5 மாதமாக அன்றாட உணவிற்கே கடும் சிரமப்படுவதாக ஜெயந்தி வேதனையுடன் கூறுவதோடு, இரண்டு கை, கால்கள் முற்றிலும் செயல்படாததால் யாராவது ஒருவரின் துணையை நம்பியுள்ளதாகவும், உணவு உண்பதைக் கூட தன்னால் செய்ய முடியாது என்ற நிலையில் அவர் உள்ளார். சமூக நலத்துறை, நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப் பட்ட உதவித் தொகையை 5 மாதமாக ஏடிஎம் அட்டை இல்லாததால் எடுக்க முடியவில்லை. கடும் சிரமத்துடன் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று பணம் அளிக்குமாறு கேட்டால்வங்கியின் உதவி மேலாளர் கேவலமாக பேசி விரட்டுவதாக கண்ணீர் மல்க ஜெயந்தி கூறுகிறார். கைகள் செயல்படாததால் கைரேகை மூலம் ஆதார் கார்டு மூலம் கூட பணம் எடுக்கமுடியாமல் உள்ள தன்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு வங்கி அதிகாரிகள் தள்ளி விட்டதாகவும் ஜெயந்தி கூறியுள்ளார். 

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளர் டி.கணேசன் கூறும்போது, அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென அளிக்கக் கூடிய உதவித்தொகையை தராமல்கேவலமாக பேசும் செயல் கண்டிக்கத் தக்கது. கடந்த வியாழனன்று பணம் எடுப்பதற்காக சென்ற ஜெயந்தியை வங்கி உதவி மேலாளர் தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார். உடனடியாக சங்கம் மூலம் தலையிட்டதையடுத்து உதவித் தொகையை வழங்கியுள்ளனர். இதுப்போன்ற நடவடிக்கையை தவிர்க்கவில்லையெனில் சங்கம் சார்பில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.இதுப்போன்று பல மாற்றுத்திறனாளிகளின் பணத்தை வங்கி அதிகாரிகள் அபகரித்துக் கொள்கின்றனரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளை கேவலமாக நடத்துகிற சென்ட்ரல் பேங்கிலிருந்து வங்கி கணக்குகளை மாற்றித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

;