tamilnadu

img

தமிழைக் கைவிட்டால், தமிழ்நாடு என்னவாகும்?

தற்போதைய தமிழக அரசிடம், பள்ளிக் கல்வித்துறை யில் புதிய இரண்டு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இவற்றைக் கல்வி அமைச்சர் மறுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.10,12ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுமுறை மாற்றம், மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்துப் படிப்பது பற்றியே இந்தப் பரிந்துரைகள் உள்ளனவாம்! எனினும், இது வெறும் பள்ளிமாணவர் சார்ந்த செய்தியல்ல, அடுத்தடுத்த தலைமுறை சார்ந்த, கவனமாகக் கையாளவேண்டிய செய்தி! எனவே இதுபற்றிக் கல்வியாளர், தமிழார்வலர், சமத்துவ சமுதாயம் காணும் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருமே கவனிக்க வேண்டிய செய்தியாகிவிட்டது.10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டுடன், உயர்கல்விக்குரிய “முதன்மைப்பாடங்கள்” எனப்படும் (இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்கு, விலங்கியல், தாவரவியல், வணிகவியல் முதலானவற்றில்) நான்கும் ஆக ஆறு தேர்வுகளை எழுதிவருகிறார்கள் அல்லவா? இதில் மொழிப்பாடச் “சுமையைக் குறைப்ப தாக”, “தமிழ், ஆங்கிலம் எனும் மொழிப்பாடங்கள் இரண்டில்ஒன்று படித்தால் போதும்”என, பரிந்துரை செய்திருப்ப தாகச் செய்திகள் வருகின்றன. இதுதான் அடிமடியில் கைவைத்து, தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து தமிழை முற்றிலும் அகற்றிவிடக்கூடிய - முதலுக்கே மோசம் செய்யக் கூடிய

- பரிந்துரையாக அச்சம் தருகிறது!

இந்தப் பரிந்துரையைக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார் என்றாலும், இதிலிருக்கும் ஆபத்தை முன்னுணர்ந்து இதைக் கைவிடச் செய்வது மிகமிகவும் அவசியம் மற்றும் அவசரமாகும். எனவே இதுபற்றிய புரிதலை ஏற்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன். “ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டில் ஒன்றைப் படித்தால் போதும்” என்பது, தமிழரின் அடுத்த தலைமுறைகளை நாசம் செய்துவிடும்! உயர்கல்வி தொழிற்கல்வியெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்ற காரணம் ஒன்று போதும், தமிழரே தமிழைக் கைவிட்டு ஆங்கிலத்தைப் படிக்க ஓடுவதற்கு!வேலைவாய்ப்பு ஒன்றுக்காகவே பிள்ளைகளைத் “தயாரிக்கும்” பெற்றோர் பலரும், பன்னாட்டு வணிகச் சூழலை மனதில் கொண்டு, அவற்றுக்கான அடிமைப் பணிகளில் சேர, “ஆங்கிலம் போதும். தமிழ் எதற்கு?” என்பர்! பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி நேராக வயிற்றில் விழுகிறதே! இது தவமிருந்து பெறும் சாபம் அல்லவா?ஆக, “தமிழ்நாட்டுப் பெற்றோர் விரும்புகிறார்கள், தமிழ் வேண்டாமாம்! ஆங்கிலம் மட்டுமே தம் குழந்தைகளுக்குப் போதும் என்று பல லட்சம் பெற்றோர் சொல்லும் போது தமிழக அரசு அதை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை. எனவே, இனிமேல் 12ஆம் வகுப்பில் ஆங்கிலம் மட்டுமே மொழிப்பாடமாக இருக்கும். அதற்காக அண்ணாவின் வழிவந்த இன்றைய தமிழ்நாடு அரசு, தமிழைக் கைவிட்டுவிடாது! விரும்பியவர் படிக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்யும்” என்று, இன்றைய அரசு சொல்லி, பெற்றோர் வயிற்றில் பவுடர்பால் வார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

குழந்தை விரும்புகிறதென்று இனிப்பை மட்டுமே ஊட்டும் தாய், அந்தக் குழந்தைக்கு நல்லது செய்கிறாள் என்றா பொருள்? அதே போலத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆங்கிலக் கல்வியை மட்டுமே தரும்அரசு, நல்லது செய்வதாகப் பாராட்ட முடியுமா என்ன?தன் குழந்தை எதை விரும்புகிறது என்பதை விடவும், அதன் வளர்ச்சிக்கு என்ன தரவேண்டும் என்று தீர்மானித்து, தருபவள்தான் நல்ல தாயாவாள். நல்லதை, அது விரும்பும்படித் தருபவர்தான் பொறுப்பான பெற்றோர்.  

பள்ளிப் பாடத்தில் தமிழைக் கைவிடுவதால் என்ன ஆகும்?                     

குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி அவரவர் தாய்மொழியில் இருப்பது தான் இயல்பானது மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரியானதுமாகும். உலகில் முன்னேறிய நாடுகளின் கல்வி முறை இப்படித்தான் உள்ளது.

பத்து வயதிற்குமேல் தேவையான வேறு மொழிகளைக் கற்கலாம் என்றாலும், உயர்கல்விவரை பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழியே தொடர்வதுதான் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவும்.

மகாகவி பாரதி, தன் தந்தை தனக்குத் தந்த ஆங்கிலக்

கல்வியை,

“நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன்                     

   நேருமாறு எனை எந்தை போக்கினன்,                        

செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது,                    

தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது,                         

நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன், இதை                 

நாற்பதினாயிரம் கோவிலில் சொல்லுவேன்” என்பது                                           நமது மகாகவி பாரதி, அனுபவித்து எழுதிய உண்மை! வெறும் வெறுப்பில்லை!

சரி, இதை விரித்து எழுதினால் பெருகிவிடும். இந்தக் கொடுமைக்கும் அடுத்த கொடுமை இப்போது நம் எதிரில்...!

பயிற்று மொழியாகத் தாய்மொழியை ஏற்காமல், ஆங்கிலத்தை ஏற்றுத் தொடரும் இன்றைய பாதகமான சூழலில், தமிழைப் பாடமாகக் கூட இல்லாமல், பள்ளிக் கல்வியில் இருந்தே அகற்றும் யோசனையை எப்படி ஏற்க முடியும்?

உலக நாடுகளில் கல்வியால் முன்னேறிய நாடுகள்,தமது அடுத்த தலைமுறையை, தம்மினும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல தாய்மொழிக் கல்வியையே தருகின்றன. பள்ளிக் கல்வியில் படிக்கும் மற்ற பாடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைத் தரும். அதாவது வீட்டு, நாட்டு வரவு-செலவு பார்க்கக் கணக்கு,பகுத்தறிந்து செயல்பட அறிவியல், முந்திய தமது வரலாற்றுடன் சமகாலத்துக்கும் தேவையான அரசியல்மாற்றங்களை அறிய சமூகஅறிவியல் என வாழ்வில் முன்னேற இந்தப் பாடங்கள் அவசியம்தான் என்பது உண்மைதான். வாழ்க்கை என்றால் என்ன என்பதையேமாணவநிலையில் புரியவைப்பதுதான் தாய்மொழிப் பாடம் என்பது அரசுக்காவது புரியவேண்டாமா?

வருமானத்துடன் வாழ, மற்ற பாடங்கள் உதவக்கூடும் வாழ்க்கையைக் கற்றுத்தர தாய்மொழியால்தான் முடியும்!என்ன படிப்புப் படித்து, எந்த வேலைக்குப் போனாலும் கணவன்-மனைவி குடும்பம் மற்றும் நாடு, உலகம் மனிதகுல முன்னேற்றத்திற்கான வாழ்வு பற்றிய புரிதலை, அக-புற வாழ்க்கையை, மொழிப்பாடமே தீர்மானிக்கும். (இப்போது இந்தப் புரிதல் படித்த எல்லாருக்கும் இருக்கிறதா என்று கேட்டால், தமிழைக் கற்றுக் கொண்ட தன்மைதான், அல்லது நமது கல்வி முறையில் நாம் கற்றுக் கொடுத்த அளவில்தான் இருக்கும் என்பதே பதில்!)எம்.பி.பி.எஸ். படித்தால் மருத்துவர் ஆகலாம்!பி.ஈ. படித்தால் பொறியாளர் ஆகலாம்!ஐ.ஏ.எஸ். படித்தால் ஆட்சியர் ஆகலாம்!ஆனால், என்ன படித்தால் மனிதனாகலாம்?என்பது யாரோ எழுதி எங்கோ படித்துத் துடித்த வரிகள்! எழுதியவர்க்கு என் வணக்கம். தாய்மொழியில் பண்பாட்டைப் படித்தால்தான் மனிதனாகலாம்!எட்டாம் வகுப்புப் படித்த ஜெயகாந்தனும், பத்தாம் வகுப்பே படித்த புதுமைப் பித்தனும், கந்தர்வனும், மூன்றாம் வகுப்புப் படித்த மேலாண்மை பொன்னுச் சாமியும், படைத்த வாழ்வியல் இலக்கியங்களைப் படித்து, பலநூறுபேர் முனைவர் பட்டம் பெறுகிறார் எனில், இந்தப் படைப்பாளிகள் மனிதர்களைப் படித்தவர்கள் என்பதுதானே, தாய்மொழியின் கொடை!

எந்திரங்களைப் படிக்க எந்தமொழியாலும் முடியலாம். மனிதர்களைப் படிப்பது தாய்மொழியில் மட்டும்தானே முடியும்? தாய்மொழி அறிவை வளர்ப்பது அரசுப் பள்ளிக்கூடங்களே அன்றி வேறு என்ன? அரசே பள்ளி இறுதியில் தாய்மொழி வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டால் தமிழ்நாடு தறுதலைகளின் கூடாரமாக மாறுவதை யாரால் தடுக்க முடியும்?நெடுஞ்சாலை மைல்கற்களில் தமிழை அகற்ற முயற்சி நடந்தது. இப்போதும் மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில், தொலைத்தொடர்பு, தொடர்வண்டி, மற்றும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களில் எதிலும் தமிழ் இல்லை! அஞ்சல் பணவிடைத்தாளில் கொஞ்சநாள் இருந்தது! அதுவும் இப்ப ஸ்டாக் இல்லையாம்! வங்கி உடனடிப் பணமெடுப்பு நிலையங்களில் (ஏ.டி.எம்.) பெயருக்குத் தமிழ் இருக்கும், பெரும்பாலும் அதில் தமிழை அழுத்தினால் இந்திதான் குதித்து வந்து சிரிக்கிறது! கேட்டால் அதற்கும் சிரிப்புத்தான் பதிலாக வருகிறது! இல்லை! நாம்தான் சிரிப்பாய்ச் சிரிக்கிறோம்!தமிழக அரசின் வருவாய்த்துறை, சமூகநலத்துறை, கல்விக்கூடம், ஏன் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பெரும்பாலான அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களே தமிழில் இல்லை! அல்லது அந்த விண்ணப்பம் இருப்பு இல்லாமலிருக்கும்!!

நிலைமை இப்படி இருக்க, “ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி விட்டா எப்படி இருக்கும்?” என்பதுபோல, ஓரளவு பண்பாட்டு நிலையில் தமிழைக் காத்துவரும் கிராமத்துப் பிள்ளைகள் கூட இனி உயர்கல்வியில் தமிழ் இல்லை என்பதால் ஆங்கிலத்தையே தேர்வு செய்வதைத் தவிர்க்க முடியாது தானே? ஆக, உழைக்கும் வர்க்கப்பிள்ளைகள் தமிழிலேயே படித்து உயரக் கொஞ்சநஞ்ச முயற்சிக்கும் பெருந்த டையாக இந்தப் பரிந்துரை வந்து சேரும் என்பது புரிகிறதா? அப்பத்தைப் பங்கிடவந்த குரங்கு கடைசியாக முழு அப்பத்தையும் முழுங்கிய கதை இதிலும் நடக்கிறதா?கல்வியில்லாமல் பலநூறு தலைமுறைகள் கழிந்தன, மெக்காலேகல்வியைக் கொடுத்து சிந்தனையற்ற எழுத்தர்களை உருவாக்கி அடுத்த பல தலைமுறைகள் கழிந்தன. சுதந்திரம் வந்து, 60ஆண்டுகள் கழித்து வந்த சமச்சீர்க் கல்வி கூட சமத்துவ சமுதாயத்தைக் கொண்டு வந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள், ஆங்கிலக் கல்வி வணிகர்கள்! மிக சாமர்த்தியமாகக் காய்நகர்த்தி, மாநிலக் கல்வியிலிருந்து, மெட்ரிக்குலேஷன் போய், அதனிலும் அதிகப் பணம் காய்க்கும் மத்திய அரசின் கல்வி முறைக்கு (சிபிஎஸ்சி) மாறினார்கள். இதற்கு மாநில அரசே மறைமுக உதவி! நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை மாநில அரசே மெட்ரிக் பள்ளியில் சேர்ந்து படிக்கப் பணம் கட்டும் என்பது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தானே? நன்றாகப் படிக்கும் மாணவரை அரசுப்பள்ளியிலிருந்து விரட்டி, அவன்படிக்க மெட்ரிக் பள்ளிக்கு நிதிதருவது வேறென்ன? தாய்மொழித் தமிழ், வெளியில் நின்று அழுகிறதே!

இப்படி, தமிழக அரசின் மொழி, கல்விக் கொள்கையே வருமானத்தை மையப் படுத்தியிருப்பதால், தமிழரின் தன்மானம் மனசுக்குள் அழுது பலனென்ன? மேல்நிலைக் கல்வியில் மொழிப்பாடமாக ஆங்கிலம் மட்டும் இருந்தால் போதும் என்று, தமிழை அகற்ற அரசு முடிவெடுத்தால் வியப்படைய வேண்டியதில்லை! இன்றைய தமிழக அரசு இவ்வளவுதான்! இது தமிழர்கள் கவனமெடுத்துச் செயல்பட வேண்டிய நேரம்.ஒரே நாடு-பாரதம்! ஒரே மொழி-இந்தி, ஒரே வரி-ஜி.எஸ்.டி., ஒரே பண்பாடு எனும் அவர்களது கொள்கைத் திட்டம், சரியாகத்தான் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது! ஆர்எஸ்எஸ் செயல்திட்டம்! இதில் இவர்கள் இன்னும் சொல்லாதது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதே! அதைச் சொல்லவிடாமல் இந்தியாவின் பன்முகப் பண்பாடு தடுக்கிறது!அதை ஒழிக்கும் திட்டம்தான் அவரவர் தாய்மொழியை ஒழிப்பது!

ஒரு மொழியை ஒதுக்குவது, அவர்களது பண்பாட்டை ஒதுக்குவதுதானே? பண்பாட்டை ஒதுக்கினால், அரசியலில் வென்றுவிடலாம் என்பதுதானே அவர்களது திட்டம்? எனில், இது நமது அரசியல் பணி என்பதை உணர்ந்து அனைத்துத் தமிழரும், ஒன்று சேர்ந்து தமிழ்காக்க எழவேண்டிய தருணமிது!தமிழ்ப் பெருமையைப் பேசிக்கொண்டே, தமிழை அழிக்கும் “தமிழர்” சிலரின் அறியாமையை - அல்லது அறிந்தும் விலைபோகும் சூழ்ச்சியினை – நாம் உணர்ந்து எழவேண்டிய நேரமிது! தமிழிலக்கியவாதிகள் மட்டுமின்றி, தமிழார்வலர், சமத்துவ சமூக முன்னேற்றத்தில் அக்கறை யுள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ்காக்க எழவேண்டிய தருணம்! தும்பை விட்டு வாலைப்பிடிக்கக் கூடாதெனில் உடன் தீர்வுக்கான முயற்சியே இப்போது தேவை!“தமிழ்உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்அறிவுயரும் அறமும் ஓங்கும்இமயமலை போலுயர்ந்த ஒருநாடும்தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்” - பாரதிதாசன்


கட்டுரையாளர் 34ஆண்டுகள் அரசுப் பள்ளியில் தமிழாசிரியாகப் பணிநிறைவு செய்த எழுத்தாளர். மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com