தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மூல வைகைப் பகுதியில் வைகை நதி உற்பத்தியாகிறது. சுமார் 2.75 லட்சம் ஏக்கர் வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் வைகை அணைக்கே வந்து சேரும் வகையில் அணை கட்டமைக்கப்பட்டுள்ளது. தேனி கொட்டக்குடி ஆறு, பெரியாறு, சுருளியாறு இவற்றின் தண்ணீரும் வைகை அணைக்கு வருகிறது. வைகை நதி பிறக்கும் மேகமலை வனப்பகுதி தேக்கடி புலிகள் சரணாலயத்தை விட பல மடங்கு பெரிய வனப்பகுதியாகும். 1998- ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் பெரும் பதிப்பிற்கு ஆளானார்கள். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் தண்ணீர் ஓடிய வைகையில், 2017-ஆம் ஆண்டு 17 நாட்கள், 2018-ஆம் ஆண்டு ஏழு நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இந்தாண்டு நிலைமை மிக மோசமாக உள்ளது. வைகை அழிவின் விளிம்பிற்குச் செல்ல காரணம் என்ன என்பது கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வைகையின் முக்கிய நீர்ப்பிடிப்பான மேகமலையில் பல லட்சம் மதிப்பிலான அரிய வகை மரங்கள் வெட்டப்படுகின்றன. வனம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. வனத்தில் மழைநீர் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. தவிர வனவிலங்குகளை வேட்டையாடுதல், சட்ட விரோதமாக சுற்றுலா செல்லுதல், வனவிலங்குகளின் இருப்பிடத்தை மக்கள் வசிப்பிடமாக மாற்றுவது போன்ற பிரச்சனைகளும் உள்ளன. மேகமலை வனப்பகுதியில் வனக்காவலர்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள் ளது. ஆக்கிரமித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நகர் பகுதியில் வசிப்பவர்கள். இவர்கள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் பணியாளர்களை குடி வைத்து விவசாயம் செய்கின்றனர். இதற்குத் தேவையான தண்ணீரை வைகை நதியிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றனர். மரங்களை வெட்டிக் கடத்துவதால் மழை பெய்வதும் அரிதாகி வருகிறது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை வனப்பரப்பை விட விளைநிலங்களே அதிகமுள்ளன. இங்கு முல்லைப் பெரியாறு, சுருளியாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வரட்டாறு, வராகநதி என பல ஆறுகள் ஓடுகின்றன. நூற்றுக்கணக்கான சிற்றோடைகளும் 480 கண்மாய்களும் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணை தவிர மேகமலையில் ஐந்து சிறு அணைகள் உள்ளன. இவற்றில் தேங்கும் நீர் ஒரு போக சாகுபடிக்குக் கூட போதாது. சேமித்த நீரை விட செலவழித்த நீரே அதிகம். இதனால் தேனி மாவட்டம் நிலத்தடி நீர் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது.
வைகை அணை
வைகை அணையில் 20 அடிக்கு மண் படிவுகள் உள்ளன. அணையின் சுற்றுப்பகுதிகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வைகை அணையை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களும் விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளும் உள்ளன இந்த மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் ஐந்து மாவட்டங்களில் இருபது ஆண்டு களாக விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைக் கணக்கிட்டால் அது பல கோடியைத் தாண்டும். நம் சந்ததிகளைப் பாது காக்க நாம் வைகை நதியைப் பாதுகாக்க வேண்டும். இயற்கை வளத்தைப் பாதுகாக்கவோ, நீர் நிலை களைப் பாதுகாக்கவோ தமிழக அரசிடம் உருப்படி யான திட்டங்கள் இல்லை. ஆனால், கேரள அரசு தேக்கடி புலிகள் சரணாலயத்தை உருவாக்கியபோது அதன் வனப்பரப்பு 777 சதுர கிமீ ஆக இருந்தது. தற்போது அது 925 சதுர கிமீ ஆக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வன வளத்தையும் நீர்வழிப்பாதை களையும் பாதுகாக்க அங்கு கட்டமைப்புகள் உள்ளன. வைகை அணையை துல்லியமான இடத்தில்தான் கட்டி உள்ளனர். ஆனால், அதை புணரமைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. அணையை சுத்தம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்தாலும் அரசியல் தலையீடுகளால் அந்த நிறுவனங்கள் பின் வாங்கிவிட்டன.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் வைகையாற்றின் கரையைத் தாண்டி ஆக்கிரமிப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி அருகிலிருந்து மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கோச்சடை, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகமுள்ளது. துவரிமான், கோச்சடை ஆகிய பகுதிகளில் மின் மோட்டார் மூலமாக பல தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனங்கள் தண்ணீர் திருடுகின்றன. மதுரை மாநகராட்சி கோச்சடையில் நீரேற்று நிலையப் (வைகையாற்றை ஒட்டிய பகுதி) பகுதியில் கால்வாய்களில் அள்ளப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி வருகிறது. அவை மெல்ல, மெல்ல ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மரங்கள் இருக்கும். இன்றைக்கு அவை ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்படுகிறது. பெத்தானியாபுரம் பகுதியில் சிந்தாமணி கால்வாய் தொடங்குமிடத்தில் சிலர் இடங்களை ஆக்கிரமித்து மாட்டுத் தொழுவங்கள் அமைத்தும், கோவில்கள் கட்டியும் ஆக்கிரமித்துள்ளனர். சிலர் தங்களுடைய சொந்த இடம் போல் கற்களை நட்டுவைத்துள்ளனர். மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் இது சம்பந்தமாக ஆய்வு நடத்தவேண்டும். கழிவுநீர் கலப்பதும், மணல் கொள்ளையும் தொடர்கிறது. இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீர் நிலை பாதுகாப்பு குறித்து பொதுநல வழக்குகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டும் இடமாகத்தான் வைகையாறு உள்ளது. மதுரை மட்டுமின்றி வைகையாறு தோன்றி கடலில் கலக்கும் இடம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை சம்மந்தப் பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக வைகையாறு உற்பத்தியாகும் மேகமலை பகுதியில் நீர்வழிப்பாதை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.