tamilnadu

img

ஸ்டெர்லைட் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்க ஆவணங்கள் தமிழக அரசு தாக்கல்....

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில்3 ஆயிரம் பக்க ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாகவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம் இடைக்கால அனுமதி கோரிய மனுவுக்கும் பதில்அளிக்க தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கவும் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம்19-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசின் நிபுணர் குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. மூடப்பட்டுள்ள ஆலையில் தொழில்நுட்ப ரீதியாக எந்திரங்களால் எவ்வித அபாயமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகளை காரணம் காட்டி ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்க வேண்டியதில்லை. எனவே, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை அரசு வக்கீல் யோகேஷ் கண்ணா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆலை விதிமுறை மீறல்கள், ஆய்வு அறிக்கைகள், காற்று மாசு, நீர் மாசு உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு வருகிற 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.