தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தையை தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலை தளத்தில் பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு குழந்தை பெரியார் வேடமிட்டு நடித்தது. அந்த வீடியோவில் பெரியார் கடவுளை ஏதிர்த்தது ஏன், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு பகுத்தறிவு போன்ற பெரியாரின் கொள்கைகள் குறித்து அந்த குழந்தை பேசி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைப்பார்த்த கோவில்பட்டியைச் சேர்ந்த பேரூராட்சி தற்காலிக பணியாளர் வெங்கடேஷ் குமார் பாபு என்பவர், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்து கொன்று தூக்கிலிட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று வெங்கடேஷ் குமார் பாபு கயற்றாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஒரு சிறுமி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு சமூக தலைவரைப் போல வேடம் அணிந்த வீடியோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு கோவில்பட்டியைச் சேந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் சாதி மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தி, சாதி, மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் செய்திகளையோ, புகைப்படங்களையோ, வீடியோக்களையோ சமூக வலைதங்களில் பரப்புபவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.