tamilnadu

img

பட்டியல் இனத் தொழிலாளியை காலில் விழவைத்து கொலை மிரட்டல்.... 7 பேர் கைது - எஸ்பி நேரில் விசாரணை

தூத்துக்குடி:
கயத்தாறு அருகே ஆடு மேய்த்த தகராறில் பட்டியலின தொழிலாளியை காலில் விழச்செய்து மிரட்டல் விடுத் தது தொடர்பாக 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள ஓலைகுளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (55). பட்டியல் இனத்தை சேர்ந்த இவர், ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகள்கள் உள்ளனர். இதே ஊர் தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் சிவசங்கு (60). இவரும் ஆடுகள் வளர்த்து மேய்த்து வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஆடு மேய்த்ததில் வாய்த் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டது. கடந்த 8 ஆம் தேதி பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்டம் அமைந்துள்ள பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து மிரட்டி காலில்3 முறை விழுந்து மன்னிப்பு கேட்கவைத்து உள்ளனர். தொடர்ந்து பால்ராஜை மிரட்டி அங்கிருந்து விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் முழுவதையும் சிவசங்கு தரப்பினர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சிவசங்கு காலில் விழுந்து பால்ராஜ் மன்னிப்பு கேட்பது போன்றும், அவருக்கு சிவசங்கு தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து துரத்துவது போன்றும் ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனடியாககோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கயத்தாறு காவல்நிலைய காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர்கள் முருகன்மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து பால்ராஜை மன்னிப்பு கேட்க வைத்தவர்களையும், மன்னிப்பு கேட்ட வீடியோவை ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் ஆப்குழுக்கள் மற்றும் சமூக வலைதளங் களில் பரவ விட்ட அனைவரையும் விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து ஓலைகுளம் சிவசங்கு(60), அவரது மகன் சங்கிலிபாண்டி (20), மகள் உடையம்மாள் (33), சிவசங்குவின் அண்ணன் மகன்கள்பெரியமாரி (47), வீரையா(42), பெரியமாரி மகன் மகேந்திரன் (20), மற்றொரு உறவினர் மகாராஜன்(24) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி தாக்குதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சாதிபெயரை சொல்லி திட்டுதல், சாதியின்பெயரால் மிரட்டி காலில் விழவைத்து வன்கொடுமை செய்தல், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பரவவிடுதல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஓலைக்குளம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.பால்ராஜ் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

                            ******************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைக்குளம்கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரை சாதி ஆதிக்க சக்திகள் காலில் விழுந்து கும்பிட வைத்த சம்பவத்திற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கயத்தாறு அருகே ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்த சிவசங்கு என்பவரும் கடந்தசில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துகொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனை மனதில் வைத்துக்கொண்டு பட்டியல் சாதியை சேர்ந்த பால்ராஜை சாதி ஆதிக்க சக்திகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவைத்து அவமானப்படுத்தி அதனைவீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவத் திற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழுகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதில் சம்பத்தப்பட்ட சாதி ஆதிக்கசக்தியினர் அனைவர் மீதும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து உடனடியாக கைது செய்துகடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல் துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.