தூத்துக்குடி:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் தற்போது சிவப்பு வளையத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 24 போ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 72 வயது மூதாட்டி ஒருவா் உயிரிழந்தார். எஞ்சியுள்ள 23 பேரில் 18 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
மாவட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி 36 ஆவது வார்டு பகுதிகள், தங்கம்மாள்புரம், காயல்பட்டினம், பேட்மாநகரம், ஆத்தூா், அய்யனாரூத்து, கேம்லாபாத் ஆகிய 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு வளையத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.