மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி வைணவ கோவிலில் இன்று பங்குனி வெண்ணைத்தாழி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் மக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இத்திருவிழாவை காண்பதற்காக கூடியிருந்தனர். சுட்டெரிக்கும் கடும் கோடையில் நெரிசல் மிகுந்த மேல ராஜவீதி கடைவீதியில் உள்ள சாகர் ஜவுளி நிறுவனத்தில் இஸ்லாமிய ஊழியர்கள் தங்கள் ரமலான் மாத நோன்பு கடைபிடிக்கும் நேரத்திலேயே சுற்றுலா வந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நீர் மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பொட்டலங்கள் மற்றும் கை விசிறிகளை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை விநியோகித்தனர். ஹைதராபாத்திலிருந்து வெண்ணைத்தாழி திருவிழாவிற்கு வந்திருந்த வைணவ இந்து பெரியவர் ஒருவர் கூறும்போது ரமலான் மாதத்தில் பட்டினி கிடந்து விரதம் இருக்கும் இவர்கள் மற்றவர் பசியைப் போக்குவதற்கு சாப்பாடு கொடுப்பது பண்பில் மிகச் சிறந்தது என்று குறிப்பிட்டார் நீண்ட காலமாக இந்நிறுவனத்தின் இஸ்லாமிய பெருமக்கள் மனிதநேய நல்லிணக்கத்தின் அடையாளமான இத்தொண்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.