tamilnadu

img

அத்திச் செடி வளர்ப்பும்: குளறுபடியும்

மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவருப்படுகிறது. அதில் ஒன்றுதான், அத்திப்பழச் செடி வளர்ப்பு. திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அத்திப்பழம் ஒரு செடி 40 ரூபாய் என்று  கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து  800 செடிகளை இறக்குமதி செய்துள்ளனர். அந்த செடிகளை பெருமாள் பட்டு ஊராட்சி ஏரியின் மத்தியப் பகுதியில் சுமார் 1. 5 ஏக்கரில் 153 செடிகளை நடவு செய்துள்ளனர். அதேபோல், கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிளங்கை ஊராட்சியில் 2.5 ஏக்கர் அரசு மேய்க்கால் நிலத்தில் 255 அத்திப்பழச் செடிகளை கடந்த ஜூன் மாதம் நடவு செய்துள்ளனர். மேலும் அத்திப்பழச் செடிகளை சுற்றி ரூ. 1.5 லட்சம் செலவில் வேலி அமைத்தும் உள்ளனர். பின்னர், இந்த அத்திப்பழச் செடிகளின் பாராமரிப்பை முழுக்க முழுக்க மகளிர் குழுவிடம் ஒப்படைத்தனர் ஊரக வாழ்வாதார இயக்கத்தினர். இந்த அத்திச் செடிகளிலிருந்து கிடைக்கும் பழங்களை அந்தந்த ஊராட்சியில் உள்ள அனைத்து மகளிர் குழுக்களும் பறித்து சந்தையில் விற்பனை செய்து தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வழி வகை செய்து கொடுத்தனர். ஆனால், அத்திப்பழச் செடிகள் ஏரியில் நடவு செய்ததால் அதற்கு ஏற்ப மண் வளம் இல்லை. இதனால், 5 மாதத்திலேயே செடிகள் அழிந்து விட்டன.  மேலும் செடி வளர்க்க மகளிர் குழுவிற்கு முறையான பயிற்சியும் கொடுக்க வில்லை. 800 செடிகளில் 5 செடிகளில் தான் துளிர் விட்டுள்ளது. நல்ல மண் வளம் உள்ள நிலத்தை தேர்வு செய்து, நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.  முறையாக பராமரிப்பு செய்திருந்தால்  9 மாதத்தில் நல்ல சாகுபடிசெய்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் 50 க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களில் உள்ள பெண்களின் குடும்ப பொருளாதாரம் உயர்ந்திருக்கும். ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் போனதால் பெண்கள் வேதனையில் உள்ளனர். இது குறித்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் பகுதி அமைப்பாளர் டி.ஆனந்தன் கூறுகையில், “அரசின் திட்டங்கள் மக்கள் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். ஏதோ கடமைக்கு செய்யக் கூடாது. அப்படி செய்தால் அரசின் பணம் தான் வீனாக செலவாகும். தற்போது இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை  கண்டறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். - பெ.ரூபன்.