திருவண்ணாமலை, மார்ச் 24- திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில், திங்கள் இரவும், செவ்வாயன்று காலையிலும் காய்கறிகளை வாங்க மக்கள் குவிந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதன் இணைப்பு சங்கிலியை உடைக்கும் விதமாக 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மீண்டும் மார்ச் 24 மாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 சட்டம் அமலாவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில் உள்ள மளிகை, காய்கறி கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். அதேபோல் ஆரணி புதிய மார்க்கெட்டிலும் மக்கள் குவிந்தனர். அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால், இறைச்சி கடைகள் நடத்ததடை இல்லை என அரசு அறிவித்திருந்தாலும், அடுத்தசில தினங்களில் அரசின் அறிவிப்பு எப்படி இருக்கும் என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் மளிகை, காய்கறிகளை வாங்கி சென்றனர்.