tamilnadu

திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் முக்கிய செய்திகள்

மின்வாரிய கேங்மேன் தகுதித் தேர்வு:  டிச.14இல் தொடக்கம்
திருவண்ணாமலை, டிச. 7- திருவண்ணாமலையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட மின் வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வு வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது. மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு திருவண்ணாமலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளா் அலுவலகத்தில் கடந்த நவம்பா் 30, டிசம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  மழை காரணமாக தோ்வு தள்ளி வைக்கப்பட்ட தோ்வு இம் மாதம் 14, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நீதிமன்றத்தில் தீட்சிதர் ஆஜர் 
சிதம்பரம்,டிச.7- கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் பக்தரை தாக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கி இராமநாதபுரத்தில் 15 நாள் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று உத்திரவிட்டது. இதையடுத்து சனிக்கிழமை சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கீதா (பொறுப்பு) முன்னிலையில்  தீட்சிதர் தர்ஷன் ஆஜரானார். பின்னர் இவருக்கு இரண்டு ஜாமீன்தாரர் பெறப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.

அரசு நிதி ரூ.50.88 லட்சம் கையாடல்: 4 பேருக்கு நான்கு ஆண்டு சிறை
கடலூர், டிச.7- அரசு நிதி ரூ.50.88 லட்சத்தை போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்ததாக முன்னாள் வட்டாட்சியர் உள்பட 4 பேருக்கு கடலூர் நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துக் கொடுப்பதற்கும், புதியதாக வீடுகள் கட்டவும், தொழில் செய்யவும் அரசால் நிதி வழங்கப்படுகிறது.  இதன்படி, 1994-95, 95-96 ஆம் நிதியாண்டுகளில் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிதியை வழங்காமல் மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்து நிதியை அரசு அலுவலர்கள் கையாடல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவலர்கள் 1998 ஆம் ஆண்டில் விசாரணை நடத்தி 2003 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர்.  அதில், அப்போதையை விருத்தாசலம் கோட்டாட்சியர் பாஷா மற்றும் திட்டக்குடி வட்டாட்சியர் வீ.வீரசெல்லையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 15 பேர் போலியாக ஆவணங்களை தயாரித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நிதி வழங்கியது போன்ற விபரங்களை அரசுக்கு வழங்கி ரூ.50.88 லட்சம் கையாடல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, கடலூரிலுள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி திருவேங்கடசீனுவாசன் வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், முன்னாள் வட்டாட்சியர் வீ.வீரசெல்லையா (71), தலைமையிடத்து கூடுதல் துணை வட்டாட்சியர்கள் க.பிச்சைபிள்ளை (71), ஞா.கோயில்பிள்ளை (71), இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த புரோக்கர் கு.சதாசிவம் (70) ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  இதனை அனைவரும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும், வீரசெல்லையா, சதாசிவத்திற்கு தலா ரூ.12 ஆயிரமும், பிச்சைபிள்ளை, கோயில்பிள்ளைக்கு தலா ரூ.6 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது கோட்டாட்சியர் பாஷாவும், கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும் இறந்து விட்டனர். மற்ற 9 பேரையும் வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார்.