tamilnadu

img

வினாத்தாள் வெளியான விவகாரம்: திருவண்ணாமலை  முதன்மை கல்வி அலுவலர் விடுவிப்பு

தமிழகத்தில் நடந்து வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாக விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பொறுப்பிலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுக்கான  வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், நிகழாண்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை தயாா் செய்து கொள்ளுமாறு கல்வித் துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில், திங்கள்கிழமை (பிப்.14) நடைபெறவிருந்த பிளஸ் 2 கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை வெளியானது. இது அந்தப் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்-ஆப் வழியாக பகிரப்பட்டது. 
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரித்தனா். இதில், செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானது தெரிய வந்தது.
தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேற்று காலை விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணபிரியாவை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.