திருவண்ணாமலை, நவ. 26- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் மீது, தேர்தல் தகராறு தொடர்பாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஏசு முனுசாமியின் உறவினர்கள் கூறியபோது, “கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏசு முனுசாமி என்பவர், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பேசி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் மற்றும் அவரின் தம்பிகள், ஏசு முனுசாமி மற்றும் அவரின் மனைவி மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த ஏசு முனுசாமி குடும்பத்தினர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்றார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.