tamilnadu

கலசப்பாக்கம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் கொலை

திருவண்ணாமலை,மே.6-திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, இரண்டு வீட்டினருக்கு இடையே நடந்த சண்டையில், பிஎஸ்என்எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த விண்ணப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு(53). இவர் போளூரில் பிஎஸ்என்எல் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்பிகாவிற்கும், இவர்களின் பக்கத்துவீட்டை சேர்ந்த செல்வம் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த தகராறை தடுக்கச் சென்ற வேலுவை, செல்வம் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். அதில் மயங்கிக் கீழே விழுந்த வேலுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் காவல்துறையினர், கொலை வழக்காக பதிவு செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.