tamilnadu

தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்

தாராபுரம், ஏப்.15 -தாராபுரத்தில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் துணை ஆட்சியர் பவன்குமாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தாராபுரம் வட்டத்தில் சிறியதும், பெரியதுமாக 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சீர்காழி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் 18 ஆம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். இதற்கு முன்னர் நடந்த தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படவில்லை. எனவே தாராபுரம் பகுதியில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

;