tamilnadu

img

கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதா? பொது மக்கள் சாலை மறியல்

திருப்பூர், செப். 1 – திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் உள்ள மாரி யம்மன் கோயில் நிலத்தை காவலர் குடியிருப்புக் கட்டு வதற்கு மாற்றிக் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்ப்  பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியாண்டிபாளையத்தில் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 11.16 ஏக்கர் நிலம் காலி இடமாக உள்ளது.

இந்த இடத்தை காவல் துறைக்கு மாற்றி அங்கு காவலர் குடியிருப்புக் கட்டுவதென அரசு நிர்வாகம் முடிவு செய் தது. இந்த விபரம் தெரியவந்தவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதி பொது மக்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக இந்த இடத்தில் காவலர் குடியிருப்புக் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றக் கூடாது என தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்த மக்கள், இவ்வாறு பணி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாயன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னியகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், குள்ளேகவுண் டன் புதூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூறு பேர் ஆண்டிபாளையம் மங்கலம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர், இந்து அறநிலையத் துறை அதிகாரி ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேசினர்.

ஆண்டிபாளையம் மனியம் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.பத்மநாபன் உள்ளிட்டோர் கூறுகையில், இந்த கோயில் நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட இடம் வழங்கத் தயார். ஆனால் இந்த ஊர் மக்கள் யாரிடமும் எந்த கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக நிலத்தை மாற்றிக் கொடுத்து காவலர் குடியிருப்புக் கட்டுவது சரியல்ல. இந்த இடத்தைப் பாது காப்பதற்காக ஊர் மக்கள் சொந்தப் பணத்தில் வேலி அமைத்துள்ளனர்.

இப்போது 2 ஏக்கரை மட்டும் கோயி லுக்கு விட்டுவிட்டு 9 ஏக்கர் இடத்தில் காவலர் குடியிருப் புக் கட்ட எடுத்துள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதையடுத்து புதன்கிழமை கோயில் இடத்திலேயே கூட்டம் நடத்துவதாகவும், இதில் பொது மக்கள் பங்கேற்று தங்கள் ஆட்சேபனை, கருத்துகளை தெரிவிக்கலாம். சாத்தியமானவற்றை நிறைவேற்றுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் பதில் கூறப்பட்டது.

இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த மறியல் காரணமாக மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.