tamilnadu

img

“கட்சி பதவி கிடைத்ததும் ஊர் அறியத் திருமணம்” என பெண்ணை ஏமாற்றிய திருப்பூர் பாஜக பிரமுகர்

திருப்பூர், ஜூன் 27 –

“நான் இருக்கும் கட்சியில் மேல் பதவி ஆறு மாதத்தில் கிடைத்துவிடும், அதன் பிறகு பெற்றோரிடம் சொல்லி ஊர் அறியத் திருமணம் செய்து கொள்கிறேன்!” எனச் சொல்லி ஒரு பெண்ணை திருப்பூர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஏமாற்றி இருக்கிறார்.

மேலும் அந்த பிரமுகர் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், மோசடி செய்து பணம் பறித்து வந்ததாகவும் பல்வேறு புகார்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. எனினும் காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இது பற்றிய விபரம் வருமாறு: கோவையைச் சேர்ந்தவர் எம்.கலையரசி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதில் தனது கணவர் பெயர் மோதிலால் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் தாயார் பாதுகாப்பில் வாழ்ந்து வருவதாகவும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மோதிலால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, தனது பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது, மோதிலால் கட்சியில் இருப்பதால் மேல் பதவி ஒரு ஆறு மாத காலத்திற்குள் கிடைத்துவிடும். பிறகு அவரது பெற்றோரிடம் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தான் கர்ப்பமான விபரத்தை அவரிடம் கூறியிருக்கிறார். தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வரை கர்ப்பமான விபரத்தை பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி, கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

அதன் பிறகு அவரிடம் இருந்து வேறு எந்த தகவல் தொடர்பும் இல்லை. எனவே கடந்த மே 27ஆம் தேதி அம்மாபாளையத்தில் உள்ள மோதிலால் வீட்டுக்குப் போன போது, அவர் இல்லை என்று அவரது பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் ரூ.50 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தாங்களே முன்னின்று திருமணம் நடத்தி வைப்பதாக கூறினார்கள், எனவே தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என புகார் கடிதத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த புகார் கடிதத்தின் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி விசாரித்தபோது, அந்த பெண்ணை ஏமாற்றிய மோதிலால் என்பவர் பாரதிய ஜனதா இளைஞரணியின் திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார் என்று தெரியவந்தது.

அதேசமயம் பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததுடன், அவர் தொழிலதிபர்கள், வர்த்தகர்களையும் ஏமாற்றி வரவழைத்து, பெண்களுடன் இருப்பது போல வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகவும் ஊடகங்களில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக பிரமுகர் பெண்களை ஏமாற்றியது, மோசடி செய்து பணம் பறித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தற்போது அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக தரப்பு, மோதிலால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே பதவி விலகிவிட்டார் என்று “வழக்கமான” தங்கள் பதிலைக் கூறியுள்ளனர். ஆனால் அந்த பிரமுகர் பெண்ணிடம் பேசுவது போல் வெளியாகியிருக்கும் ஆடியோ பதிவில், “என்னைப் பற்றி கட்சி தலைவரிடம் புகார் சொல்லிவிட்டாயா, எனது பதவி போகப் போகிறது” என்று சொல்வது போல் உள்ளது. ஆக அவர் பதவி விலகவில்லை. பதவி நீக்கப்படவும் இல்லை. அவர் பதவியில் நீடிப்பதாகவே தெரிகிறது.

ஏற்கெனவே பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவருடன் இவருக்குத் தொடர்பிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மோசடி சம்பவத்தில் இவர் மட்டுமின்றி வேறு சிலரும் சேர்ந்து கொண்டு வலைப்பின்னலாக செயல்பட்டிருக்கக்கூடும் என்றும், எனவே இது பற்றி காவல் துறை முழுமையாக விசாரணை செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியின் பிரமுகர் சம்பந்தப்பட்ட விவாகரம் என மூடி மறைக்க காவல் துறையோ, தமிழக அரசோ முயற்சிக்கக் கூடாது என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.