திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பனியன் தொழிலாளி கொலை
திருப்பூர், மே 7 -திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பனியன் தொழிலாளி குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.திருப்பூர் செரங்காடு பிள்ளையார் கோவில் வீதியில் சிவக்குமார் என்பவர் தனது தாயுடன் வசித்து வந்தவர். கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து இருக்கும் இவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சிவக்குமாரின் தாய் திருச்செந்தூர் சென்றுவிட்டு செவ்வாயன்று திரும்பி வந்தார். வீட்டின் கதவை திறந்தபோது, வீட்டிற்குள் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஊரக காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் காவலருக்கு அரிவாள் வெட்டு போதை கும்பல் தாக்குதல்: ஒருவர் கைது
திருப்பூர், மே 7 -திருப்பூர் நெருப்பெரிச்சல் பாரதிபுரம் பகுதியில் கஞ்சா போதை கும்பலைப் பிடிக்கச் சென்ற காவலரை அந்த கும்பல் விரட்டிச் சென்று தாக்கி அரிவாளால் வெட்டியது. இதில் அவர் காயமடைந்தார். இச்சம்பவத்தை அடுத்து காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவலரை வெட்டிய மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் தலைமறைவு ஆனார்கள்.திருப்பூர் நெருப்பெரிச்சல் சமத்துவபுரம் அருகே பாரதிபுரம் பகுதியில் திங்களன்று கஞ்சா போதை கும்பல் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சீருடை அணியாத காவலர் ஒருவர் அங்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த போதை கும்பலிடம் அவர் விசாரித்தபோது காவலர் என்பதை அறியாமல் அந்த கும்பல் அவரை தாக்கத் தொடங்கியது. அவர் எதிர்த்தாக்குதல் நடத்திய நிலையில் கும்பலாகச் சேர்ந்து தாக்கியவர்கள் பாரதிபுரம் குடியிருப்பு பகுதிக்குள் வந்து ஒருவர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து அந்த காவலரை வெட்டியுள்ளார். இதில் காவலர் காயமடைந்தார். இதன்பின் அவர் கொடுத்த தகவல் பேரில் மறைந்திருந்த காவல் படையைச் சேர்ந்தோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரிவாளால் வெட்டிய மணிகண்டன் என்பவரை கைது செய்து கையில் விலங்கு பூட்டியுள்ளனர். இதையடுத்து வந்திருப்பவர்கள் காவலர்கள் என்பது தெரிந்து மேற்படி போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவு ஆனது.
மாட்டிறைச்சிக் கடை: பாதுகாப்புக் கேட்டு மனு
திருப்பூர், மே 7-திருப்பூரை அடுத்த படியூரில் உள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு பாதுகாப்புக் கேட்டு கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்துள்ளார். இதுகுறித்து படியூர் இந்திரா நகரைச் சேர்ந்த எம்.கணேசன் (53) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது மூத்த மருமகன் ராமசாமியும் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக படியூர், தரைப்பாலம் அருகே மாட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாங்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடையை நடத்தி வருகிறோம்.இந் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் என்னை அழைத்து கடையைக் காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்தனர். எனவே, எனக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனது மாட்டிறைச்சிக் கடைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.