tamilnadu

புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் பட்டா கோரி காங்கேயம் வருவாய்த் தீர்வாயத்தில் மனு

 திருப்பூர், ஜூன் 18-  5 வருடங்களாக இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை காங்கேயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மனு அளித்தனர். இது குறித்து வருவாய்த் தீர்வாய அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் அப்பகுதி மக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: காங்கேயம் தாலுகா, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்தோர் இலவச வீட்டு மனைப் பட்டா  கேட்டு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறோம். இந்நிலையில், காங்கேயம் தாலுகா, வட சின்னாரி பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள நிலங்களை எங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக காங்கே யம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியரும் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். அதற்காக எங்களின் வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தனி வட்டாட்சி யரிடம் அளித்துள்ளோம். எனவே, குடியிருக்க சொந்த வீடோ, சொந்த நிலமோ இல்லாத எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.