திருப்பூர், மே 28 - கந்துவட்டி கடனுக்கு வீட்டை கிரயம் செய்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஆணைக்கல்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (43). கடந்த 2012 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பழனிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தங்கமணி என்பவரிடம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய், வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூபாய் 10 ஆயிரம் வட்டி பணமாக ரூ.4 லட்சம் வரை கொடுத்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்குமார் குடியிருந்த வீட்டை, கொடுத்த கடனுக்கு ஈடாக அடமான பத்திரம் பதிவு செய்து கொடுக்க தங்கமணி கேட்டதை அடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் தங்கமணி அந்த வீட்டை அடமானமாகப் பெற்றதாக பதிவு செய்வதற்கு மாறாக, தனது பெயருக்கு கிரையம் செய்துவிட்டதாகவும், அது பின்னர் தெரியவந்தது என்றும் சிவக்குமார் கூறுகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சிவக்குமாரின் வீட்டுக்கு, தங்கமணி அடியாட்களுடன் வந்து அந்த வீட்டை கிரயம் பெற்றுவிட்டதால் காலி செய்யுமாறு மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட சிவக்குமார், சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் தங்கமணி அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கந்துவட்டி கேட்டு வீட்டை ஏமாற்றிக் கிரயம் செய்து, காலி செய்யச் சொல்லி தங்கமணி மிரட்டுவது தொடர்பாக சிவக்குமாரும், அவரது மனைவி மல்லிகாவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாக தங்கமணி மீது கொடுத்திருக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.