திருப்பூர்,அக்.4- திருப்பூர் குமரனின் 116 வது பிறந்தநாளையொட்டி திருப்பூரில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி சென்னிமலையில் பிறந்த திருப்பூர் குமரன், இளம் வயதிலேயே தன்னை சுதந்திர போராட்டத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். 1932 ஆம் ஆண்டில் தனது 28 வயதில் திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களை திரட்டி மூவர்ண தேசிய கொடியுடன் அவர் பங்கேற்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்த திருப்பூர் குமரன் கொடியை கெட்டியாகப்பிடித்தபடி உயிர் நீத்தார். இதனால் அவர் கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் அரசு சார்பில் நினைவிடம் மற்றும் சிலை நிறுவி பிறந்த நாள் விழா நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 4 ஆம் தேதி திருப்பூர் குமரன் 116 வது பிறந்த நாளாகும். இதையொட்டி திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.