திருவள்ளூர், மார்ச் 15- உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். முழுமையான விடுதலை கிடைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டு கோள் விடுத்துள்ளார். தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 9 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, செவ்வாயன்று (மார்ச் 15) புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவரது தாயார் அற்புதம்மாள், “நீதிக்கான 31 ஆண்டு கால நீண்ட போராட்டத்தில், மிகவும் முக்கியமான காலகட்டம் இது. விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட, காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கின்ற இந்தப் பிணை ஓர் இடைக்கால நிவாரணம்” என்றார்.