tamilnadu

img

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அபிநிதி என்ற 4 வயது சிறுமி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அபிநிதி என்ற 4 வயது சிறுமி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 3 குழந்தைகள், யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த 23-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 26-ஆம் தேதி அவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அபிநிதியின் சகோதரி யோகலட்சுமி, சகோதரன் புருஷோத்தமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், திருப்பத்தூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள்  டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.